செஞ்சுரியனில் ஒரு தரமான சம்பவம்.. சச்சினை முந்திய கோஹ்லி
செஞ்சுரியன்: செஞ்சுரியனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி 21வது டெஸ்ட் சதத்தை விளாசினார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 335 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
நேற்றுமுன்தினம், 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கோஹ்லி 85 ரன்னுடனும், ஹார்திக் பாண்டியா 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

கோஹ்லி 2வது இந்திய வீரர்
இந்த நிலையில் நேற்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது கோஹ்லி சதம் விளாசினார். டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியின் 21வது சதம் இதுவாகும். வேகப்பந்து வீச்சுக்கு உதவும், செஞ்சூரியனில் சச்சின் டெண்டுல்கருக்குப் பின் சதமடிக்கும் 2வது இந்திய வீரர் கோஹ்லி மட்டுமே.

சச்சினை முந்தினார்
அதிவேகமாக 21 சதத்தை அடித்த வீரர்கள் வரிசையில் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார். முதல் 3 இடங்களில் பிராட்மேன் 56 இன்னிங்ஸ், கவாஸ்கர் 98 இன்னிங்ஸ், ஸ்டீவ் ஸ்மித் 105 இன்னிங்ஸ் ஆகியோர் உள்ளனர். கோஹ்லி, 109 இன்னிங்ஸில் 21வது சதம் விளாசியுள்ளார்.
சச்சின் பாராட்டு
இந்த போட்டியில், கோஹ்லி 153 ரன்களை விளாசினார். சச்சினும் இந்த ஆட்டத்தை டிவிட்டரில் பாராட்டியுள்ளார். முக்கியமான இன்னிங்ஸ் இது என கூறியுள்ள சச்சின், பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி காண முடியும் என்று கூறியுள்ளார்.

சச்சினின் சிறப்பு
இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்களான, ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன் போன்றோர் கூட செஞ்சுரி அடித்தது இல்லை. 2010ம் ஆண்டு, மாஸ்டர் பிளாஸ்டர், சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்தியா சார்பில் இந்த மைதானத்தில் இதுவரை சதம் விளாசிய ஒரே வீரர். அவர் 111 ரன்கள் விளாசி நாட்அவுட்டாக நின்றார். அதுவும் கஷ்டமான 2வது இன்னிங்சில் அதை அவர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேறு பேட்ஸ்மேன்கள் ஆதரவு கிடைக்காததால், இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.


Click it and Unblock the Notifications