கராச்சி: 2016ம் ஆண்டு ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று தெரிகிறது.
மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டித் தொடர் இடம் பெறலாம் என்றும் தெரிகிறது. இருப்பினும் இதுதொடர்பான இறுதி முடிவு, சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. என்றாலும், எமிரேட்ஸில் இப்போட்டிகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 வருடத்திற்கு ஒருமுறை ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டித் தொடரை 2016ம் ஆண்டு நடத்த எந்த ஆசிய நாடும் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்தியா, இலங்கையும் கூட விருப்பம் காட்டவில்லை. எனவே அனைவருக்கும் பொதுவாக எமிரேட்ஸில் இதை நடத்தலாம் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் யோசிப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டியை நடத்த இந்தியாவும் கூட ஆட்சேபம் தெரிவிக்காது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடரின் முதல் சில போட்டிகள் அங்குதான் நடத்தப்பட்டன. மேலும் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கும் இந்தியாவுக்கு எமிரேட்ஸே சரியான களமாகவும் இருக்கும்' என்றார்.