கராச்சி : கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் விசாரணையின்போது ஒத்துழைப்பு கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதித்துள்ளது.
பிசிபி ஊழல் தடுப்பு சட்டத்தின் இரண்டு பிரிவுகளின்கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ள உமர் அக்மல், தற்போது இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீடு குறித்து தனியாக குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என்று பிசிபி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மீது பிசிபி ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பிசிபி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையை முடுக்கி விட்டது. இந்த விசாரணையின்போது, சரியான முறையில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று அவர்மீது குறறம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டது.
வீரர்களுக்கு டெஸ்ட் எடுங்க... அவங்களுக்கு வைரஸ் தொற்று இருக்கான்னு பாருங்க
இந்நிலையில், இந்த தடையை மறுபரிசீலனை செய்யவும், குறைக்கவும் கோரி உமர் அக்மல் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு கிடைக்க பெற்றுள்ளதாக பிசிபி உறுதி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்றும், ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டு அவரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் பிசிபி தரப்பில் கூறப்பட்டுள்ளது.