3 ஆண்டுகள் தடை
நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 2009ல் முதல் முறையாக விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், சிறப்பான வீரராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இதுகுறித்த விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஏப்ரலில் அவருக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
அடுத்த ஆகஸ்ட்டில் விளையாடலாம்
இதை எதிர்த்து அக்மல் மேல்முறையீடு செய்த நிலையில், தற்போது அவரது தடைக்காலம் 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொண்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பாகிர் முகமது கொக்கார் தற்போது இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 20 முதலே அவரது தடை நடைமுறையில் உள்ள நிலையில், அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் அக்மல் விளையாட முடியும்.
உமர் அக்மல் அறிவிப்பு
இந்நிலையில், இந்த தீர்ப்பு தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், இதே குற்றச்சாட்டுக்கு குறைவான தண்டனைகளை சக வீரர்கள் பெற்ற நிலையில், தனக்கு மட்டும் அதிகப்படியான தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அக்மல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து, இதை மேலும் குறைக்க முறையீடு செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தலைமை பயிற்சியாளரிடம் வாக்குவாதம்
உமர் அக்மல் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக உள்ளார். கடந்த 2014ல் லாகூரில் டிராபிக் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2017ல் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 3 போட்டிகளில் தடை பெற்றிருந்தார்.