தென்னாப்பிரிக்காவில் போட்டி
ஐசிசியின் அன்டர் 19 உலக கோப்பை போட்டி தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதிய நிலையில், இந்த தொடர் தற்போது இறுதிப்போட்டி வரை வந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதவுள்ளன.
10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
பிரியம் கார்க் தலைமையில் ஜப்பான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் மோதிய இந்திய அன்டர் 19 அணி, ஆரம்பத்திலிருந்தே தான் மோதிய மற்ற அணிகளுடன் சிறப்பாக விளையாடி, தொடர் வெற்றியை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானுடன் அரையிறுதியில் மோதிய இந்திய அணி, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பௌலிங்கால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நியூசிலாந்தை வெற்றி கொண்ட வங்கதேசம்
இதேபோல நேற்றைய அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வங்கதேசம் வெற்றி கொண்டுள்ளது. அணியின் மஹ்முதுல் ஹசன் ஜாய் 127 பந்துகளில் 100 ரன்களை குவித்து அணி வெற்றி பெற உதவி புரிந்தார். முதலில் ஆடிய நியூசிலாந்து எட்டு விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை அடித்த நிலையில், 44.1 ஓவர்களிலேயே வங்கதேசம் இலக்கை வெற்றிகரமாக அடைந்து வெற்றிபெற்றது.
கைகொடுத்த பெக்காம் வீலர்
இந்த அரையிறுதிப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழக்க அடுத்ததாக களமிறங்கிய பெக்காம் வீலர் கிரீனால் 83 பந்துகளில் 75 ரன்களை அடித்து அணி நல்ல ஸ்கோரை பெற உதவினார். எதிரணி வீரர் சோரிபுல் இஸ்லாம் 10 ஓவர்களில் 45 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்து, நியூசிலாந்து அணியின் ஸ்கோரை சுருக்கினார்.
கைகொடுத்த பார்ட்னர்ஷிப்
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய ஜாய், தோஹிட் ஹிரிடோய் (40) மற்றும் ஷாஹாதத் உசேன் (40) ஆகியோருடன் அடுத்தடுத்து பார்ட்னர்ஷிப்பில் விளையாடி, 44.1 ஓவர்களிலேயே அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
வங்கதேச அணி கேப்டன் உறுதி
அன்டர் -19 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு வங்க தேச அணி முதல் முறையாக சென்றுள்ளது. இந்நிலையில் 4 முறை உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணியுடன் வங்கதேசம் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளது. இந்நிலையில், முதல்முறையாக உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுவதை மனதில் கொள்ளாமல், சாதாரணப் போட்டியில் விளையாடுவதை போல விளையாடுவோம் என்று அந்த அணியின் கேப்டன் அக்பர் அலி கூறியுள்ளார்.