சென்னை: வேகப் பந்துவீச்சாளர் லட்சுமி பதி பாலாஜி முதல் தர கிரிக்கெட்டிலிரநுந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதான பாலாஜி, இந்திய அணிக்காக 30 ஒரு நாள் போட்டிகளிலும், 8 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார். தொடர காயங்கள் காரணமாக இந்திய அணியில் இவரால் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போய் விட்டது. மீண்டும் மீண்டும் காயமடைந்ததால் இந்திய அணிக்குள் நிரந்தரமாக இடம் பெற முடியாமல் போய் விட்டது.
குறுகிய காலமே சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்தாலும் கூட தனக்கென ஒரு பெயரை எடுத்தவர் பாலாஜி. 2004ல் இந்திய அணி பாகிஸ்தானுக்குப் போயிருந்தபோது அந்த நாட்டு சர்வாதிகாரி முஷாரப்பால் பாராட்டப்பட்டவர் பாலாஜி.
குறிப்பாக ராவல்பிண்டியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இவர் 7 விக்கெட்களைச் சாய்த்து பாகிஸ்தானை அதிர வைத்தார்.
தனது ஓய்வு குறித்து பாலாஜி கூறுகையில், எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. நான் அவர்களுக்கு நிறைய நேரம் செலவிட வேண்டியுள்ளது. கடந்த 16 வருடமாக என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆடி விட்டேன்.
டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவேன். டிஎன்பிஎல், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார் பாலாஜி.
ஐபிஎல் கிரிக்கெட்டில், பாலாஜி முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் இடம் பெற்றார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார்.