பெங்களூரு: இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், தோனியும் நேற்று பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் யோ யோ உடற்தகுதி பரிசோதனையில் கலந்துகொண்டனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆண்டுகளாக நட்சத்திரமாக ஜொலித்துவருபவர் இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் தோனி. ஆனால், இப்போது மிகவும் கடுமையான உடற்தகுதி சோதனைகள் வந்துவிட்ட போதும், அவர் அதிலும் தொடர்ந்து முன்னேறிவருகிறார்.
36 வயதாகும் தோனி இளம் வீரர்களுடன் போட்டி போட்டு சிறப்பாக விளையாடி வருகிறார். மிகவும் கடுமையான யோ யோ உடற்தகுதி பரிசோதனைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து வரும் தோனி நேற்று பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார்.
தோனி தேசிய கிரிக்கெட் அகாடமியில் யோ யோ உடற்தகுதி பரிசோதனையில் கலந்துகொண்டார். மேலும், இதில், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறும் வீரர்கள் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் நேற்று யோ யோ உடற்தகுதி பரிசோதனையில் கலந்துகொண்டனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த மார்ச் 17ம் தேதி நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51வது போட்டியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் விளையாடியபோது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், கோஹ்லி இந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் சுர்ரே கவுண்ட்டி கிரிக்கெட் கிளப் போட்டியில் விளையாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. கோஹ்லிக்கு ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியிலிருந்து விலக்கப்பட்டதாக பிசிசிஐ கடந்த மாதம் தெரிவித்தது.
விராட் கோஹ்லி கவுண்ட்டி போட்டியில் பங்கேற்பதிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐயின் மருத்துவக் குழு, மற்றும் ஸ்கேன் பரிசோதனை, சிறப்பு மருத்துவ நிபுணர்களின் பரிசோதனைக்குப் பிறகே எடுக்கப்பட்டது. இந்திய கேப்டனான விராட் கோஹ்லி இப்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையின் கீழ் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள உள்ளார். கோஹ்லி தனது பயிற்சியைத் தொடங்கிய பின்னர், உடற்தகுதி பரிசோதனைக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார்.
இந்த நிலையில், வீரர்களின் உடற்தகுதி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக யோ யோ உடற்தகுதி பரிசோதனையின் அளவை 16.1 புள்ளி அளவிலிருந்து 16.3 என்று உயர்த்த வேண்டும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிவருகிறார்.கடந்த வாரம் யோ யோ உடற்தகுதி பரிசோதனையில் இளம் வீரர் சஞ்சு சாம்சன் தோல்வியடைந்தார். அதனால், அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்து அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.