சோயிப் அக்தரிடம் பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளராக இரட்டை பதவியை வகித்து வருகிறார் மிஸ்பா உல் ஹக். அவரை தலைமை தேர்வாளர் பதவியிலிருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதுவும் தீர்மானிக்கப்படவில்லை
இதனிடையே, தான் தலைமை தேர்வாளர் பதவிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என்று சோயிப் அக்தர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் பாஷ் யூடியூப் நிகழ்ச்சிக்காக பேசிய அவர், தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் ஆனால் இன்னும் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
விருப்பம் தெரிவித்த அக்தர்
தான் தலைமை தேர்வாளர் பதவிக்கு மிகவும் தகுதியானவன் என்றும் அக்தர் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களைபோல தான் பதவிக்காகவும் சம்பளத்திற்காகவும் இந்த பதவிக்கு வர நினைக்கவில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தான் நினைப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் வீரர்களிடம் தோல்வி பயம்
பாகிஸ்தான் வீரர்களுக்கு தோல்வி குறித்த பயம் இருப்பதாகவும் அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக உணர்வதாகவும் அக்தர் கூறினார். மேலும் வாசிம் அக்ரம் மற்றும் ஜாவத் மியான்டட் போன்ற உலகத்தர வீரர்களை அணியில் உருவாக்க தான் விருப்பம் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார் அக்தர்.
தகுதியானவர்கள் என புகழாரம்
தான் தொடர்ந்து இந்திய வீரர்களை புகழ்வது குறித்தும் அக்தர் பேசினார். விராட் கோலியை தான் வெறுமனே புகழவில்லை என்றும் 70 சர்வதேச சதங்களை வைத்துள்ள ஒரு வீரரை பாராட்டுவதில் என்ன தவறு என்றும் அக்தர் கேள்வி எழுப்பினார். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும்வகையில் சிறப்பான பௌலிங் அணியை விராட் உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல ஜஸ்பிரீத் பும்ரா மிக சிறப்பான வகையில் தன்னை முன்னேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.