கராச்சி: உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக வக்கார் யூனிஸ் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைப்பெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கேப்டன் அப்ரிடி கடும் விமர்சனத்திற்கு ஆளானார். மேலும் பயிற்சியாளர் வக்கார் யூனிசும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இதையடுத்து கேப்டன் அப்ரிதி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து இப்போது வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "பயிற்சியாளர் பதவியில் இருந்து கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்கிறேன். 2015-ம் ஆண்டு நடைப்பெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு நான் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவறிவிட்டது.
நியூசிலாந்து தொடர், ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகியவற்றில் அப்ரிதியின் மோசமான கேப்டன்ஷிப் காரணமாகவே பாகிஸ்தான் அணி தோற்றது.
மேலும் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தோல்விக்கான காரணம் குறித்து நான் அளித்த ரகசிய அறிக்கை ஊடகங்களில் கசிந்ததும், நான் பதவி விலகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னேற்றம் அடையவேண்டும். எனவே தான் நான் பதவி விலகுகிறேன். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவி செய்ய தயாராகவே உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.