'டாஸ் எங்களுக்கு ஒரு பொருட்டேயில்லை.. இதுதான் எங்களின் பலமே' - ஆஸி. கோச் ஜஸ்டின் லாங்கர்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பை செமி பைனலில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எளிதில் சாய்த்து விடும் என்று கூறப்பட்டது.
ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டது பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வந்துள்ளது ஆஸ்திரேலியா அணி. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 176 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

பைனலில் ஆஸ்திரேலியா
பாபர் அசாம்-முகமது ரிஸ்வான் கூட்டணி சிறப்பான ஆட்டம்; இறுதியில் பக்கர் ஜமான் அதிரடி இந்த ரன்களை பாகிஸ்தான் எட்ட உதவியது. பிறகு ஆஸ்திரேலியா பேட்டிங் தொடர ஷாகின் அப்ரிடி, ஷதாப் கான் ஓவரில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். வார்னர் சிறப்பாக விளையாடி அவுட்டானதும் ஆஸ்திரேலியா 96-5 என்று தத்தளித்தது. ஆனால் மேத்யூ வேட்டும், மார்கஸ் ஸ்டோனிசும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

ஜஸ்டின் லாங்கர்
அதுவும் ஷாகின் அப்ரிடி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணியை பைனலுக்கு அழைத்து சென்ற மேத்யூ வேட் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார். ஆஸ்திரேலியா அண்டை நாடான நியூஸிலாந்துடன் பைனலில் மோதுகிறது. இந்த நிலையில் பைனலில் டாஸ் பற்றி எங்ககளுக்கு கவலையின்றி அச்சமின்றி விளையாடுவோம் என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெறும் மனநிலை
இறுதிப் போட்டியில் டாஸ் போன்ற காரணிகளை பொருட்படுத்தாமல் வெற்றி பெறும் மனநிலையுடன் ஆஸ்திரேலியா வரும் என்று கூறியுள்ள ஜஸ்டின் லாங்கர் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது முதலில் பந்துவீசினாலும், எந்த சூழ்நிலையிலிருந்தும் வெல்ல முடியும் என்ற மனநிலை எங்களுக்கு உள்ளது என்று கூறினார்.

பயமற்ற கிரிக்கெட்
நாங்கள் தொடர்ந்து பயமற்ற கிரிக்கெட்டை விளையாடுவோம் என்று கூறிய அவர் மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்த உடனே ஷதாப் கான் பந்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் அடித்த சிக்ஸர்தான் பயமற்ற கிரிக்கெட் என்று கூறினார். நியூசிலாந்து உண்மையிலேயே நல்ல அணி. அவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள் என்று கூறிய ஜஸ்டின் லாங்கர் நியூசிலாந்தை சாதரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications