கபில்தேவ் பதில்
தற்போது இது குறித்து கபில்தேவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பளிச்சென்று ஒரு பதிலை அளித்துள்ளார். அனைத்து தலைமுறையுமே ஒன்றுக்கு ஒன்று வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள கபில்தேவ் , தமது காலத்தில் கவாஸ்கர் சிறந்த வீரராக விளங்கி வந்ததாக கூறினார். அதன்பிறகு, டிராவிட் ,சச்சின், ஷேவாக் போன்ற தலைமுறையினர் வந்து சாதித்ததாக குறிப்பிட்டுள்ள கபில்தேவ், தற்போது ரோகித் ,விராட் கோலி என சிறந்து விளங்குவதாக தெரிவித்துள்ளார்.
சிறந்த வீரர்
இனிவரும் காலங்களில் விராட் கோலி விட சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் குவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கபில்தேவ் கூறியுள்ளார். தமக்கு சில வீரர்களிடமிருந்து சிலவற்றை பிடிக்கும் சிலது பிடிக்காது என்பதால் 11 வீரர்கள் விளையாடும் ஆட்டத்தில் ஒருவர் மற்றும் இருவரை சிறந்த வீரர் என்று தேர்வு செய்ய தாம் விரும்பவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
விவாதம்
விராட் கோலி விளையாடிய காலத்திலிருந்து அவர் சச்சின் சாதனையை உடைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை அவர் மோசமான பார்மில் இருந்ததால் அந்த விவாதம் அப்படியே அடங்கி இருந்தது. தற்போது விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறு இன்னிங்ஸில் மூன்று சதம் அடித்ததன் மூலம் தற்போது அந்த கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில் கபில்தேவ் அளித்துள்ள விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சச்சின் vs கோலி
சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 34 ஆயிரத்து 357 ரன்கள் அடித்துள்ளார் இதில் 100 சதம் அடங்கும். தற்போது 34 வயதான விராட் கோலி 24 ஆயிரத்து 889 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 74 சதங்கள் அடங்கும். இன்னும் விராட் கோலி ஐந்து ஆண்டுகள் விளையாடி பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடித்து 26 சதங்கள் அடித்தால் மட்டுமே சச்சினின் சாதனையை உடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.