மும்பை: கேப்டன் டோணியிடமிருந்து விக்கெட் கீப்பிங் திறமையை வளர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடிய ராகுலுக்கு விக்கெட் கீப்பர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டிருந்தது. ஆனால், நிறைய சொதப்பி வைத்தார்.
இந்த நிலையில் டோணி தலைமையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் ராகுலுக்கு இடம் கிடைத்துள்ளது. முதல்முறையாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் இடம் பிடித்துள்ளார்.
இதையொட்டி நிருபர்களிடம் பேசிய அவர், விக்கெட் கீப்பர் பணி என்பதை எளிதாக நினைத்திருந்தேன். ஆனால் அது மஹா கஷ்டமான வேலை என்பதை புரிந்து கொண்டேன்.
நான் விக்கெட் கீப்பராக இன்னும் நிறையவே முன்னேற வேண்டும். உலகின் தலை சிறந்த விக்கெட் கீப்பரான டோணியுடன் பயிற்சியில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி, டோணியிடமிருந்து ஆலோசனைகளை பெறுவேன். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து டோணி ஓய்வு பெற்ற பிறகு நிலையான விக்கெட் கீப்பரை கண்டறிய பிசிசிஐ திணறி வருகிறது. ராகுல் தனது திறமையை மேம்படுத்தினால் அவர் டெஸ்ட் அணிக்கான கீப்பராக ஜொலிக்க முடியும்.