அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் கடந்த 21ம் தேதி முதல் துவங்கி வரும் 8ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதில் ஏ அணியில் இடம்பெற்றிருந்த இந்திய மகளிர், முதலில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதி வெற்றி பெற்றனர். இதையடுத்து நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை அணியுடன் மோதி தொடர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கவனத்தை பெற்றுள்ள ஷபாலி
கடந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் ஏ அணியில் முதலிடத்தில் உள்ள இந்திய மகளிர், நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதவுள்ளனர். கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இளம்திறமை ஷபாலி வர்மா இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியை நோக்கி அணியை வெற்றிநடைபோட காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷபாலி வர்மா சாதனை
இந்த தொடரின் 4 போட்டிகளில் சிறப்பாக விளையாடி, 161 ரன்களை குவித்துள்ள ஷபாலி வர்மா, 40.25 சராசரியுடன் அதிக ரன்களை குவித்த வீராங்கனைகளில் 3வது இடத்தை பிடித்துள்ளார். முதலிரண்டு இடங்களில் இங்கிலாந்தின் நடாலி ஸ்சீவர் மற்றும் ஹெதர் நைட் உள்ளனர். மேலும் இந்த ரன் குவிப்பின்மூலம் ஐசிசியின் சர்வதேச டி20 தரவரிசையிலும் முதலிடத்தை பெற்றுள்ளார் ஷபாலி.
கூடியுள்ள அணியின் வலிமை
கடந்த 2018ல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதியில் இதே இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். மேலும் கடந்த 2009, 2012, 2014 மற்றும் 2016 ஆண்டுகளிலும் இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில் அணியின் வலிமை தற்போது கூடியுள்ளதால் இந்த முறை கோப்பையை இந்தியா கைகொள்ளும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோப்பையை வெல்ல உறுதி
மகளிர் டி20 உலக கோப்பையில் இதுவரை இறுதிப்போட்டி வரை முன்னேறாத இந்திய அணி, நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தினால், இறுதிப்போட்டிக்கு முன்னேற்றமடையும். மேலும் கோப்பையை வெற்றி கொள்ளவும் முயற்சிக்கும். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
குழுவாக முயற்சிப்போம்
இந்நிலையில், கடந்த போட்டிகளை போலல்லாமல், அணியின் வீராங்கனைகள் தனித்தனியாக இல்லாமல் குழுவாக வெற்றியை நோக்கி நடைபோட்டு வருவதாகவும், தனிநபரை நம்பி அணி இல்லை என்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றியின்மூலம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டியை சந்திப்பதற்கும் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகரித்துள்ள அணியின் பலம்
ஷபாலி வர்மாவை அடுத்து, இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், மிடில் ஆர்டரில் உள்ள வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் போன்ற வீராங்கனைகளும் நம்பிக்கை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா போன்றவர்களும் அரையிறுதியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பூனம் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பான தருணங்களை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பான பேட்டிங்
இதனிடையே பி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணியும் 3 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் அரையிறுதியில் இந்தியாவை சந்திக்க உள்ளது. அந்த அணியில் நடாலி தொடரில் 202 ரன்களுடன் முன்னிலையில் உள்ளார். இதேபோல பந்துவீச்சாளர்களும் சிறப்பான ஆட்டங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா -இங்கிலாந்து இடையிலான அரையிறுதிப்போட்டி மிகுந்த சவால்கள் நிறைந்ததாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.