மகளிர் உலக கோப்பை பைனல்.. இந்தியா கோப்பை வெல்ல ஹர்மன்பிரீத் குடும்பம் பிரார்த்தனை
சண்டீகர்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று குருதுவாராவில் ஹர்மன்பிரீத் கௌர் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்தனர்.
இங்கிலாந்துடன் இன்று இறுதி போட்டி லண்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தய வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌரின் குடும்பத்தினர் பஞ்சாபில் மோகா நகரில் உள்ள குருதுவாராவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் கிரிக்கெட் ரசிகர்களும் ஈடுபட்டனர்.

பிரார்த்தனை
இதுகுறித்து கௌரின் தந்தை ஹர்மந்தர் சிங் புல்லர் கூறுகையில், இந்திய அணிக்கு எங்களுடைய வாழ்த்துகள். இன்று காலை மோகாவில் உள்ள குருதுவாராவில் பிரார்த்தனையில் ஈடுபட்டோம். இந்திய மகளிர் அணி கோப்பையுடன் திரும்பும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

வெண்டைக்காய் சப்ஜி
வெற்றியுடன் திரும்பி வரப் போகும் மகளுக்குப் பிடித்தமான உணவுகளை செய்து போட அவரது தாயார் காத்துள்ளாரம். கௌருக்கு வெண்டைக்காய் சப்ஜி என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் வேகவைத்த உருளைக் கிழங்கில் செய்த உணவுகளும் மிகவும் பிடிக்கும் என்றார்.

வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி
கௌருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரரான ஷேவாக்கும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார். அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், அரையிறுதியில் இந்தியாவுடன் மோதிய ஆஸ்திரேலியா அணியினர் மிகவும் சிறப்பான ஆட்டக்காரர்கள். அவர்களை இந்திய அணி தோற்கடித்த போட்டியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

171 ரன்கள் குவிப்பு
ஹர்மன்பிரீத் அவருக்கு நன்றி தெரிவித்து டுவீட்டியுள்ளார். அதேபோல் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், கௌரின் அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு குணம் குறித்து பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதி போட்டியில் கௌர் 171 ரன்களை குவித்ததால் மோகாவில் உள்ள அவரது வீட்டருகே கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
கடந்த 1983-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கபில் தேவ் 175 ரன்களை குவித்து இமாலய சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications