இறுதிப்போட்டி
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக 24 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து சென்றது. புறப்படுவதற்கு முன்னதாக மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் குவாரண்டைனில் இருந்த இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்ற பிறகும் குவாரண்டைனில் இருந்து வருகின்றனர்.
குவாரண்டைன் விதிமுறைகள்
இது மிக முக்கியமான போட்டி என்பதால் 10 நாள் குவாரண்டைனில் 3 நாட்கள் மட்டும் கடும் குவாரண்டைனில் இருந்துவிட்டு 4வது நாளில் இருந்து பயிற்சியை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீரர்கள் தனி தனியாக மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குழுவாக இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர்.
குழு பயிற்சி
பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய அணி வீரர்கள் புஜாரா, பும்ரா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளம் வீரர் வழக்கம் போல் தனது அதிரடிகளை காட்டுவதற்காக பெரிய ஷாட்களுக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். மறுமுனையில் மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைக்கும் புஜாரா தனக்கே உரிய ஸ்டைலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
பண்ட் மீது எதிர்பார்ப்பு
இந்திய அணி கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்றதற்கு இளம் வீரர் ரிஷப் பண்ட்-ன் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இவரது ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.