முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர்
இந்திய அணியில் மட்டுமின்றி ஐபிஎல் உள்ளிட்டவற்றிலும் சிறப்பான சாதனைகளை புரிந்த ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இதையடுத்து கிரிக்கெட் விமர்சனம் உள்ளிட்டவற்றில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
பங்கேற்காத இந்திய வீரர்கள்
தற்போது ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்று விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த லீக் தொடரில் இதுவரை எந்த இந்திய வீரரும் பங்கேற்று ஆடியதில்லை. இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிவரும் வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதி வழங்காமல் உள்ளதே இதற்கு காரணம்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா உதவி
இந்நிலையில் பிக் பாஷ் லீக்கில் யுவராஜ் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் அவருக்கு உதவி புரிந்து வருவதாக யுவராஜின் மேனேஜர் ஜேசன் வார்னே தெரிவித்துள்ளார். யுவராஜூக்கு தேவையான அணியை தேர்ந்தெடுப்பதில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கவனம் செலுத்தி வருகிறது. இதனிடையே பிபிஎல்லில் இந்திய வீரர்கள் இணைவது வியப்பானது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கழக தலைவர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற யுவராஜ் சிங்
கடந்த 2011 உலக கோப்பை வெற்றி கூட்டணியில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங், கடந்த 2017 முதல் எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காத நிலையில் கடந்த ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். இவர் 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்களையும், 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளையும் இவர் விளையாடியுள்ளார்.