கங்குலியின் சிறந்த அணி
இந்த முறை அவர் யுவராஜ் சிங்குக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவி தோனிக்கு போனதோடு, கங்குலி உருவாக்கிய சிறந்த அணியும் கிடைத்தது என கூறி விமர்சனம் செய்துள்ளார். நல்ல அணி இருந்ததாலேயே தோனி கேப்டன்சியில் வெற்றிகள் குவித்ததாக குத்திக் காட்டி பேசி உள்ளார் அவர்.
கங்குலி கேப்டன்சி
கங்குலி 2000த்தின் துவக்கத்தில் இந்திய அணியின் கேப்டனாக பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தார். அப்போது குறைந்த உள்ளூர் போட்டி அனுபவம் கொண்ட, திறமையான பல இளம் வீரர்களை நேரடியாக இந்திய அணியில் சேர்த்தார்.
பல இளம் வீரர்கள்
யுவராஜ் சிங், முகமது கைஃப், ஜாகிர் கான், வீரேந்தர் சேவாக் என பல இளம் வீரர்கள் பின் முன்னணி வீரர்களாக மாறி பல போட்டிகளை, பெரிய தொடர்களை வென்று கொடுத்தனர். அந்த வரிசையில் கடைசியாக கங்குலி சேர்த்த முக்கிய வீரர் என தோனியை கூறலாம்.
தோனியின் வளர்ச்சி
ஆனால், இந்திய அணியில் தோனியின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. அறிமுகம் ஆகி மிகச் சில தொடர்களிலேயே அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக மாறினார். 2007இல் டி20 அணிக்கு கேப்டனாக மாறி, பின் ஒருநாள் அணிக்கும் கேப்டன் ஆனார்.
தோனி அதை செய்யவில்லை
இந்த நிலையில், கங்குலி எப்படி இளம் வீரர்களை ஊக்குவித்து அணியை உருவாக்கினாரோ அது போல தோனி செய்யவில்லை என்றும், அவருக்கு நல்ல சிறப்பான கட்டமைப்பை கொண்ட அணி கிடைத்ததாகவும் கூறி விமர்சித்துள்ளார் யோக்ராஜ் சிங்.
தோனியை பற்றி பேசுகிறார்கள்
யோக்ராஜ் சிங் கூறுகையில், "நான் சேவாக், கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் பேசிய வீடியோக்கள் சிலவற்றை பார்த்தேன். அவர்கள் அனைவரும் தோனி பற்றி சில விஷயங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறி உள்ளனர்" என மற்ற வீரர்களுக்கு தோனி மீது இருக்கும் அதிருப்தியை சுட்டிக் காட்டினார்.
கங்குலிக்கு பாராட்டு
மேலும், "ஏன் எல்லோரும் கங்குலி பற்றி அதிக அளவில் பாராட்டி பேசுகிறோம்? அவர் அணியை உருவாக்க ஆரம்பித்த போது, தரவரிசையில் இந்தியா ஏழாவது இடத்தில் இருந்தது. அவர் யுவராஜ், கைஃப், ஹர்பஜன், சேவாக், கம்பீர் என இளம் வீரர்களைக் கொண்டு புதிய அணியை உருவாக்கினார்" என்றார்.
கேப்டன் பதவி
அடுத்து கேப்டன் பதவி பற்றி பேசினார். "யுவராஜ் சிங் கேப்டன் ஆகி இருக்க வேண்டும். ஆனால், தோனி கேப்டன் ஆனார். அத்துடன் நல்ல கட்டமைக்கப்பட்ட அணியும் அவருக்கு கிடைத்தது. இது விதி." என தோனியை கடுமையாக விமர்சனம் செய்தார் யோக்ராஜ் சிங்.
யுவராஜ் முதுகில் குத்தினார்கள்
மேலும், தோனி, விராட் கோலி மட்டுமில்லாமல், தேர்வுக் குழுவினரும் யுவராஜ் சிங் முதுகில் குத்தி விட்டார்கள் எனவும் அவர் கூறி உள்ளார். யுவராஜ் சிங்கை பிசிசிஐ முறையாக வழியனுப்பவில்லை எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் யோக்ராஜ் சிங்.