டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அடுத்த ஆண்டில் முடிவு செய்ய உள்ளதாக, இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்த யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி வீரராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருதினப் போட்டிகள் மற்றும் 58 டி-20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
சரியாக விளையாடாததால், அவர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடைசியாக கடந்தாண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். தற்போது 36 வயதாகும் யுவராஜ் சிங், உடல் தகுதியை உறுதி செய்யும் யோ-யோ தேர்விலும் தோல்வி அடைந்தார். கடைசியாக, கடந்தாண்டு டிசம்பரில் யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.
தற்போது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் யுவராஜ் சிங், அடுத்த ஆண்டில் ஓய்வு பெறுவது குறித்து கண்டிப்பாக முடிவு எடுப்பேன் என்று கூறியுள்ளார். ஓய்வு பெறுவது என்பதை தவிர்க்க முடியாது. நானும் 18 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ஓய்வு முடிவை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம்பெறுவதற்கு யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும் அணியில் இடம்பெறுவேன் என்று அவர் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
மிகச் சிறந்த ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங், இந்த ஐபிஎல் சீசனிலும் சரியாக சோபிக்கவில்லை. இதுவரை 5 ஆட்டங்களில் 36 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.