எனக்கு நடந்தது தான் சேவாக், ஹர்பஜன், ஜாகிர், கம்பீருக்கும் நடந்தது.. பிசிசிஐயை விளாசிய யுவராஜ் சிங்!
மேட்ச் வின்னர் என்ற பதத்தை முதன்முதலில் இந்திய அணியில் ஒரு வீரரை அடையாளம் காட்ட பயன்படுத்தத் துவங்கியதும் யுவராஜ் சிங்கிடம் இருந்துதான்.
Recommended Video
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட்டில் அணிக்காக நீண்ட காலம் ஆடிய வீரர்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை எனக் கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதிரடி வீரர்
யுவராஜ் சிங் 2000மாவது ஆண்டில் இந்திய அணியில் காலடி எடுத்து வைத்து துவக்கத்தில் இருந்தே அதிரடி வீரர் என பிரபலம் அடைந்தார். மிடில் ஆர்டரில் இந்திய அணியில் பேட்டிங் பலத்தை பன்மடங்காக பெருக்கியவர். பல போட்டிகளில் அணியை வெல்ல வைத்தவர்.

உலகக்கோப்பை நாயகன்
தன் விக்கெட் போனாலும் பரவாயில்லை என சுயநலமின்றி அணிக்காக அடித்து ஆடக் கூடியவர் யுவராஜ் சிங். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்.

முன்னணி வீரர்
யுவராஜ் சிங் 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார். இரண்டு வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 10,000 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பெரிய சாதனைகள் செய்யாவிடினும், ஒருநாள் போட்டிகளில் முன்னணி வீரராக இருந்தார்.

ஓய்வு
ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பின் அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019இல் அவர் ஓய்வை அறிவித்தார். அப்போது பிசிசிஐ தன்னை சரியாக நடத்தவில்லை என கடுமையாக குற்றம் சுமத்தி இருந்தார். அது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் விரிவாக பேசினார்.

நான் முடிவு செய்வது அல்ல
நான் ஒரு ஜாம்பவான் இல்லை. நான் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஆடி நல்ல ரெக்கார்டு வைத்துள்ள பல ஜாம்பவான் வீரர்கள் உள்ளனர். ஒரு வீரருக்கு கடைசியாக வழியனுப்புவது என்பது நான் முடிவு செய்வது அல்ல, பிசிசிஐ முடிவு செய்ய வேண்டியது என்றார்.

பெரிய வீரர்களுக்கு என்ன நடந்தது?
அவர்கள் என்னை என் கிரிக்கெட் வாழ்வின் கடைசியில் சரியாக கையாளவில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால், திரும்பிப் பார்த்தால் சில பெரிய வீரர்களான ஹர்பஜன், சேவாக், ஜாகிர் கான் ஆகியோரும் மோசமாக கையாளப்பட்டார்கள். அது இந்திய கிரிக்கெட்டின் ஒரு அங்கம். அதனால் அது எனக்கு ஆச்சரியமாக இல்லை என்றார் யுவராஜ் சிங்.

கௌரவப்படுத்த வேண்டும்
ஆனால், எதிர்காலத்தில் இந்திய அணிக்காக நீண்ட காலம் ஆடி, கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்தவர்களை நீங்கள் நிச்சயம் கௌரவப்படுத்த வேண்டும் என்ற யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்டோருக்கு நடந்தது பற்றி பேசினார்.

கம்பீர், சேவாக்
இரண்டு உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீர், சுனில் கவாஸ்கருக்கு பின் பெரிய மேட்ச் வின்னரான சேவாக் போன்றவர்களுக்கு உரிய மரியாதை அளியுங்கள். விவிஎஸ் லக்ஷ்மன், ஜாகிர் போன்றோருக்கும் கூட மரியாதை கொடுக்க வேண்டும் என்றார் யுவராஜ் சிங்.


Click it and Unblock the Notifications