சூப்பர் மச்சான்களுக்கு என்ன ஆச்சு
முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி அணி, ஒரு கட்டத்தில் இந்தாண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூப்பர் மச்சான்ஸ் அணி, சற்று சொதப்பி வருகிறது.
புள்ளிப் பட்டியலில் பின்தங்கியது
புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் மாறி மாறி இருந்து வந்த அணி தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
கோலடித்தது டெல்லி
இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில், 59வது நிமிடத்தில் காலு உச்சே கோலடிக்க, டில்லி டைனமோஸ் 1-0 என முன்னிலை பெற்றது. சார் ரஜினியும் கமலுக்கும் உண்மையில் அரசியலுக்கு வந்துவிட்டார்களா என்ற கேள்விக்கு, கமல் பாணியில் தெரியலேப்பா என்று பதில் சொல்வது போல், இந்தப் போட்டியில் சென்னையின் எப்சி தேறுமா என்ற கேள்வி எழுந்தது.
ஒரு புள்ளி மட்டும் கிடைத்தது
ஆனால் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கியது சென்னையின் எப்சி. வென்றால் மூன்று புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டிய ஆட்டத்தில், கடைசியில் டிரா செய்து ஒரு புள்ளியை மட்டும் சென்னையின் எப்சி பெற்றது.
கடைசியில் உள்ள அணியுடன் டிரா
ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு இந்தப் போட்டியின் முடிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அதே நேரத்தில் வென்றால், புள்ளிப் பட்டியலில் குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்க முடியும். மேலும் லீக் ஆட்டங்கள் இருந்தாலும், கடைசி இடத்தில் உள்ள அணியுடன் சென்னையின் எப்சி டிரா செய்தது, முதல் பத்தியை மீண்டும் படியுங்கள்.
முன்னாள் சாம்பியன்கள் மோதல்
தற்போதைய நிலையில் பெங்களூரு எப்சி 33 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. எங்கேயோ இருந்த புனே சிட்டி 28 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து. ஜாம்ஷெட்புர் எப்சி 25 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னையின் எப்சி 24 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. வரும் 15ம் தேதி இரண்டு முறை சாம்பியனான கோவா ஏடிகே அணியுடன் சென்னை மோத உள்ளது.