பைனல்ஸ் போக டோணியின் மச்சான்களுக்கு பைனல் வாய்ப்பு!
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நான்காவது சீசனின் பைனல்ஸ் நுழைவதற்கு, கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியின் சென்னையின் எப்சி அணிக்கு பைனல் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. அரை இறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணியும், எப்சி கோவா அணியும் இன்று இரவு மோத உள்ளன.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரை இறுதியில் எப்சி புனே சிட்டி அணியை வென்று, பைனல்ஸ் போட்டிக்கு பெங்களூரு எப்சி அணி ஏற்கனவே முன்னேறியுள்ளது.
மற்றொரு அரை இறுதியில், சென்னையின் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதுகின்றன. கோவாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது.

கூலாக விளையாடிய சென்னையின் எப்சி
இந்தத் தொடரிலேயே மிகவும் அதிரடியாக, ஆக்ரோஷமாக விளையாடக் கூடிய அணியாக உள்ள, கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லின் எப்சி கோவா அணியுடன் டிரா செய்ததன் மூலம், கேப்டன் கூல் டோணியின் அணி தனது இருப்பை உறுதி செய்துள்ளது.

பைனல்ஸ் போவது யார்
முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி அணி, சென்னையில் இன்று இரவு நடக்கும் இரண்டாவது அரை இறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் எப்சி கோவாவை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டியின் வெற்றியே, பைனல்ஸுக்கு யார் போகப் போகிறார்கள் என்பதை உறுதி செய்ய உள்ளதால், இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும்.

அதிரடியே கொள்கை
அதிரடி ஆட்டம் தான் தங்களுடைய தடுப்பாட்டம் என்று எப்சி கோவாவின் கோச் கூறியுள்ளார். அதற்கேற்ப அந்த அணியும் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் அதிரடி காட்டி உள்ளது. இந்தத் தொடரில் அதிக கோல் அடித்த அணியாக எப்சி கோவா உள்ளது. அதே நேரத்தில் எதிரணி அதிக கோல்கள் அடிக்க வாய்ப்பு கொடுத்த அணியாகவும் உள்ளது.

வாழ்வா சாவா போட்டி
முதல் அரை இறுதி ஆட்டத்தில் கோலடிக்கும் வாய்ப்பை அதிகம் கொடுக்காமல், மிகச் சிறந்த தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது சென்னையின் எப்சி. இன்று நடக்கும் ஆட்டம், வாழ்வா சாவா என்ற நிலையில், கிரேட் பினிஷரான டோணியின் சென்னையின் எப்சி, மிகச் சிறப்பாக பினிஷ் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications