அதிகமாக காத்திருந்தேன்
இந்த வெற்றி குறித்து அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸி கூறுகையில், இதை நம்பவே முடியவில்லை. ஆனால் கடவுள் இந்தக் கோப்பையை எனக்கு அளிப்பார் என்று தெரியும். இதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த நாள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் நாள். இந்த நாளுக்காக நீண்ட வருடங்கள் காத்திருந்தேன்.
மெஸ்ஸியின் பதில்
அர்ஜென்டினா தேசிய அணியுடனான பயணத்தை ஒரு உலகக் கோப்பையுடன் நிறைவு செய்யவே ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அதை முடித்துக் கொள்ளப் போவதில்லை. நான் இனியும் தேசிய அணிக்காக விளையாடுவேன். சாம்பியன் பட்டத்தோடு இன்னும் சில தொடர்களில் விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
ஸ்கலோனி பேட்டி
மெஸ்ஸியின் பேட்டி குறித்து பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி கூறுகையில், லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக விளையாட விரும்பினால், நிச்சயம் அணியில் நீடிப்பார். அர்ஜென்டினா அணிக்காக விளையாடலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் இடத்தில் மெஸ்ஸி இருக்கிறேன். அவரின் ஆட்டம் குறித்து அவரே முடிவு செய்ய வேண்டும்.
விலைமதிக்க முடியாத வீரர்
எங்களை பொறுத்தவரை மெஸ்ஸி என்றுமே விலைமதிக்க முடியாத வீரர். அவருக்கு பயிற்சியளிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. அர்ஜென்டினா அணியில் உள்ள ஒவ்வொரு வீரருடன் அவர் இணைந்து வெளிப்படையாக பேசுவது, இதுவரை எங்குமே பார்த்ததில்லை. எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுமே, எதிரணி எத்தனை கோல்கள் அடித்தாலும் வெற்றிக்காக போராட கூடியவர்கள்.
மக்களுக்காக வீரர்கள்
மக்களுக்காகவும், அர்ஜென்டினா ரசிகர்களுக்காகவும் வீரர்கள் விளையாடினார்கள். எதிரி என்றும் யாருமே கிடையாது. ஒவ்வொரு அணியுமே ஒவ்வொரு நாட்டுக்காக விளையாடுகின்றனர். அது ஒவ்வொரு வீரருக்கும் பெருமையே. அவர்களின் ஆட்டம் மட்டுமே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். பெனால்டி ஷூட் அவுட்டின் போது, எமிலியானோ மார்டினஸ், மிகவும் அமைதியாக இருந்தார்.
எமிலியானோ என்ன சொன்னார்?
பெனால்டி ஷூ அவுட் வாய்ப்புக்கு முன் எமிலியானோ மார்டினஸ், அர்ஜென்டினா வீரர்களிடம் நிச்சயம் சில பெனால்டியை தடுப்பேன் என்று உறுதியாக கூறி சென்றார். அதேபோல் பெனால்டியை கவனமாக அடிக்குமாறு அறிவுறுத்தினார். அவர் சொல்லியதை செய்து காட்டியதோடு, வீரர்களும் பெனால்டியை சிறப்பாக அடித்தனர் என்று தெரிவித்தார்.
மரடோனா பற்றி ஸ்கலோனி
தொடர்ந்து மரடோனா பற்றிய கேள்விக்கு, மரடோனா உயிரோடு இல்லை என்பது நீங்கள் கேள்வி கேட்கும் போது என் நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால், களத்திற்கு முதல் ஆளாக ஓடி வந்து அனைவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பார் என்று தெரிவித்தார்.