பெங்களூரு: பிஃபா கால்பந்து பட்டியலில் இந்தியாவுக்கு 96வது இடம் கிடைத்துள்ளது. இது ஏற்கனவே இருந்ததைவிட 4 இடங்கள் இந்திய கால்பந்து அணி முன்னேறியுள்ளது என்பதால் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில், இந்திய அணி மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து, இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டிகளில் படிப்படியான வளர்ச்சியை பெற்று வருவதால், தரவரிசைப் பட்டியலிலும் முன்னேற தொடங்கியுள்ளது.
அணியின் பொறுப்பாளராக 2015ம் ஆண்டில் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் பொறுப்பேற்றது முதலாக, இந்திய கால்பந்து அணி வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இதுவே, அணியின் தரவரிசை புள்ளிகள் வளர்ச்சி பெற முக்கிய காரணமாகும்.
இதன்படி, நடப்பாண்டுக்கான கால்பந்து தரவரிசை பட்டியலை பிஃபா வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்திய அணி மொத்தம் 341 புள்ளிகள் அதிகரித்து, 96வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் இந்திய கால்பந்து அணி, இத்தகைய இடத்திற்கு முன்னேறியுள்ளது இதுவே முதல்முறையாகும்.
சென்ற ஆண்டில் 100வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது மேலும் 4 இடங்கள் முன்னேறியுள்ளது. வரும் நாட்களில் இந்திய அணி மேலும் புதிய வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளதாக, கால்பந்து ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.