கோவா : சனிக்கிழமையன்று நிறைவடைந்த ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் ஆறாவது சீசன், கால்பந்து ரசிகர்களின் நினைவில் நீங்க முடியாத இடத்தை பிடிக்க உள்ளது.
இந்தியாவின் முன்னணி லீக்காக உருவெடுத்துள்ள ஐஎஸ்எல், முதன்முறையாக ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் இந்த முறை இடம் பெற்றதோடு மட்டுமில்லாமல், இளம் வீரர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம், மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வலுவான கூட்டணிகள் போன்றவற்றை கண்டது.
முதலில் இளைஞர்களிடமிருந்து தொடங்குவோம். 20 வயதேயான ஏடிகே எஃப்சியின் சுமித் ரதி, தனது அச்சமில்லாத ஆட்டத்தின் மூலம் ஆன்டானியோ ஹபாஸ் தலைமையிலான அணிக்கு அணிகலனாக இருந்தார். நட்சத்திரங்கள் நிறைந்த டீமில், 12 தடவை தோன்றி, 11 முறை தொடங்கி வைத்தார். 21 ஆட்டங்களில் 19 கோல்களை மட்டுமே கொடுத்து மூன்றாம் முறையாக கோப்பையை வென்ற ஏடிகே எஃப்சிக்கு அவரது ஆட்டம் வலு சேர்த்ததால், அவருக்கு இந்த சீசனின் ஐஎஸ்எல் எமெர்ஜிங் பிளேயர் விருது கொடுக்கப்பட்டது.
பெங்களூரு எஃப்சியின் சுரேஷ் சிங் வாங்ஜாம் பாராட்டுகளை குவித்த மற்றொரு இளம் வீரார் ஆவார். 19 வயதான இவர், கார்லஸ் குட்ராட்டால் பாதியில் அணியில் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து பெங்களூரு எஃப்சியின் தவிர்க்க முடியாத அங்கமாக திகழ்ந்தார்.
"சுரேஷ் எங்களுக்கு நிறையவே உதவியுள்ளார். அவருடைய பங்கை சிறப்பான முறையில் அளித்துள்ளார். தன் திறமையின் மூலம் தேசிய அணியிலும் அவர் இடம் பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்," என்று புகழாரம் சூட்டுகிறார் குட்ராட்.
எஃப்சி கோவாவின் மன்வீர் சிங், ஜியாக்சன் சிங், முகமது ரகிப் (கேரளா பிளாஸ்டர்ஸ்), ரெடீம் டலாங் (நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி), ஷுபம் சாரங்கி (ஒடிசா எஃப்சி) ஆகியோர் இளம் வயதிலேயே தங்கள் திறைமையை நிரூபித்த மற்ற வீரர்களாவர்.
இந்த சீசனில் விளையாடிய வெளிநாட்டு வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பான முறையிலேயே அளித்தனர்.
ராய் கிருஷ்ணாவும் டேவிட் வில்லியம்ஸும் இறுதி சுற்றுக்கு சென்றிருக்கும் ஏடிகே எஃப்சிக்கு கிடைத்த தூண்கள் என்றால் அது மிகையாகாது. ஃபிஜி மற்றும் ஆஸ்திரிலேய கூட்டணியான இவர்கள் ஏடிகேவுக்கு எப்போதெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் தங்கள் திறைமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர். சமீபத்தில் பெங்களூரு எஃப்சிக்கு எதிரான ஆட்டத்திலும் தங்கள் பங்களிப்பை அளித்தனர். கிருஷ்ணா 15 கோல்களும், வில்லியம்ஸ் 7 கோல்களும் அடித்துள்ளனர்.
"கிருஷ்ணா மற்றும் வில்லியம்ஸ் போன்ற சிறப்பான வீரர்கள் எங்கள் அணியில் இடம்பெற்றிருப்பது எங்களுக்கு மிகவும் நல்லது. அவர்கள் நல்ல ஃபார்மில் இருப்பது எங்கள் அணிக்கு கூடுதல் வலு சேர்த்தது," என்கிறார் ஏடிகேவின் கோச்சான ஆன்டானியோ ஹபாஸ்.
சென்னையின் எஃப்சிக்கு ரஃபேல் கிரிவெல்லாரோ மற்றும் நெரிஜுஸ் வல்க்ஸிஸ் ஆகியோர் பலம் சேர்த்தனர். சென்னையின் எஃப்சி இறுதி போட்டிக்குள் நுழைந்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. வல்க்ஸிஸ் 15 கோல்களும், கிரிவெல்லாரோ 7 கோல்களும் அடித்துள்ளனர். வல்க்ஸிசுக்கு தங்க காலணி பரிசளிக்கப்பட்டது.
11 கோல்கள் அடித்த ஹுகோ பவுமஸ்ஸையும், 14 கோல்கள் அடித்த ஃபெர்ரான் கொரொமினாஸையும் யாரால் மறக்க முடியும்? அவர்களுக்கிடையேயான புரிதலே எஃப்சி கோவாவை லீக் மேட்சுகளில் முன்னிலைப் படுத்தியது. கேரளா பிளாஸ்டர்ஸால் தகுதி சுற்றுக்குள் நுழைய முடியவில்லை என்றாலும், பார்தொலொமேவ் ஒபிச்சி (15 கோல்கள்) மற்றும் ரஃபேல் மெஸ்ஸி பவுலி (8 கோல்கள்) ஆகியோர் அந்த அணிக்கு தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
மைதானத்துக்குள்ளே மட்டுமல்ல, வெளியிலும் சில நல்ல கூட்டணிகள் இந்த வருடம் அமைந்தன. நிறைய முக்கிய ஒப்பந்தங்கள் இந்த சீசனில் கையெழுத்திடப் பட்டன. மான்செஸ்டர் சிட்டியின் உரிமையாளரான சிட்டி ஃபுட்பால் குரூப், மும்பை சிட்டி எஃப்சியின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது. இந்திய கால்பந்து வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
ஏடிகே மோஹன் பாகனுடன் இணைந்ததும், பிரீமியர் லீக் ஐஎஸ்எல்லுடன் இந்திய கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் போட்டுக்கொண்டதும் இந்த சீசனில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
"இந்தியன் சூப்பர் லீக் தற்போது தனது அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய கால்பந்து மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எங்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கின்றன. ஐஎஸ்எல் மற்றும் பிரீமியர் லீக்குக்கிடையேயான ஒப்பந்தம் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, கோச்சிங் மற்றும் ரெஃபெரிங்கில் முன்னேற்றத்தை கொண்டு வரும் என நம்புகிறேன்," என்கிறார் ஐஎஸ்எல் தொடரை நடத்தி வரும் ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் லிமிடெட் தலைவர் நீதா அம்பானி.
வளமான வருங்காலத்துக்கு அடித்தளம் அமைத்துள்ள இந்த ஐஎஸ்எல் சீசன் என்றும் நினைவில் நிற்கும்.