ரோம் : இத்தாலியில் கால்பந்து போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டுத் தொடர்களையும் ஏப்ரல் 3 வரை ரத்து செய்து அறிவித்தார் அந்த நாட்டின் பிரதமர் கிசெப்பே கோண்டே.
1973இல் காலராவால் 227 பேர் பலியான போது கூட அந்த நாட்டில் கால்பந்து போட்டிகள் ரத்து செய்யவில்லை.
அந்த அளவுக்கு கால்பந்து வெறியர்கள் கொண்ட அந்த நாட்டில், கொரோனா வைரஸ் தலை விரித்து ஆடி வருவதால், விளையாட்டுத் தொடர்களை ரத்து செய்துள்ளார் அந்நாட்டின் பிரதமர்.
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது. சீனா, தென் கொரியாவுக்கு அடுத்து, இத்தாலியில் தான் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் இருந்து ஐரோப்பியா கண்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், அந்த நாட்டுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 463 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய போது லேசாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துவங்கிய அந்த நாடு, தற்போது, மக்களை ஒட்டு மொத்தமாக முடக்கி உள்ளது.
ஆம், சுமார் 6 கோடி மக்களை வெளியே கூட வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளதோடு, அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். நானும் வீட்டுக்குள்ளே தான் இருக்கப் போகிறேன் என அந்த நாட்டு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தாலியின் பிரபல கால்பந்து தொடர் தான் சீரி ஏ. அந்த தொடரில் 38 போட்டிகளில் 26 போட்டிகள் முடிந்துள்ளது. இடையே பல போட்டிகள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் தான் நடைபெற்றது. தற்போது அதையும் ரத்து செய்துள்ளார் பிரதமர்.
இந்த நேரத்தில் கால்பந்தை நிறுத்துவது தான் நாட்டுக்கு முக்கியமான விஷயம் என இத்தாலி கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கால்பந்து மட்டுமில்லாமல் பனி விளையாட்டுக்கள், நீச்சல், ரக்பி, வாலிபால் என அனைத்து வித விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரோ 2020 கால்பந்து தொடர் ஜூன் 12 அன்று துவங்க உள்ளதால், அதற்குள் சீரி ஏ கால்பந்து தொடரை தேதி மாற்றி முடிக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் உள்ளது. மறுபுறம் ஈரோ கால்பந்து தொடரே நடக்குமா? என்ற கேள்வியும் உள்ளது.