கங்குலி அணியை வென்றது கோஹ்லி அணி… அரை இறுதிக்கு வாய்ப்பு
மார்கோ: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் ஏடிகே அணியை 5-1 என்ற கோல் கணக்கில், தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லியின் எப்சி கோவா வென்றது. இதன் மூலம் அரை இறுதிக்கு நுழையும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
கிரிக்கெட்டில் ஐபிஎல் போல, கால்பந்துக்காக, ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடக்கின்றன. நான்காவது சீசன் தற்போது அரை இறுதியை எட்டியுள்ளது.
பெங்களூரு எப்சி, நடிகர் ஹிருத்திக் ரோஷனின் எப்சி புனே சிட்டி, கேப்டன் கூல் டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்சி அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு நுழைந்து விட்டன.

ஏடிகேயை வென்றது எப்சி கோவா
அரை இறுதிக்கு நுழைவதற்கு மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது. இந்த நிலையில், கோவாவில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் ஏடிகே அணியை, 5-1 என்ற கோல் கணக்கில் விராட் கோஹ்லியின் எப்சி கோவா வென்றது.
அரை இறுதி வாய்ப்பு
முதல் முறையாக ஏடிகே அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், 17 போட்டிகளில், 27 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ள எப்சி கோவா, அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

சச்சின் அணி முன்னேறுமா
கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் கேரளா பிளாஸ்டர்ஸ் 25 புள்ளிகளுடனும், ஜாம்ஷெட்பூர் 26 புள்ளிகளுடனும் உள்ளன. அடுத்ததாக, இன்று நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு எப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ், 2ம் தேதி புனே சிட்டி - டெல்லி டைனமோஸ் , 3ம் தேதி சென்னையின் எப்சி - மும்பை சிட்டி, 4ம் தேதி ஜாம்ஷெட்பூர் - கோவா மற்றும் ஏடிகே - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

டிரா செய்தால் போதும்
அடுத்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அரை இறுதிக்கு கோவா முன்னேற முடியும். அதே நேரத்தில் ஜாம்ஷெட்பூர் மற்றும் கேரளா பிளாஸ்டரஸ் அணிகளும் அடுத்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications