பார்சிலோனா
பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கையெழுத்திடவில்லை. அவர் இனி பார்சிலோனா அணிகாக விளையாட்டமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பார்சிலோனா மற்றும் மெஸ்ஸி இடையே நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஆக.8) மெஸ்ஸியை வழியனுப்பி வைப்பதற்கான Farewell நிகழ்ச்சிக்கு பார்சிலோனா அணி ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுதார். அவரின் நிலையை புரிந்துக்கொண்ட ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகமளித்தனர்.
தயாராக இல்லை
பின்னர் பேசிய மெஸ்ஸி, "என் வாழ்நாளில் இப்படி ஒரு நாள் வரும் என நினைக்கவே இல்லை. இந்த 21 ஆண்டு பயணம் முடிவடைவது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வார்த்தைகள் கிடைக்கவில்லை. கிளப்புக்குள் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன். ஆனால் அணிக்கு 'Gud Bye' சொல்வேன் என்று நினைத்துப்பார்கவே இல்லை. நீண்ட வருடங்களாக இந்த அணிக்காக விளையாடியுள்ளேன். எனக்கு வாழ்கையை தந்தது இந்த அணி. ஆனால் தற்போது விடை பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. நான் மனதளவில் இதற்கு தயாராக இல்லை" என கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை கண்ட ரசிகர்களும் கண் கலங்கினர்.
கம்பேரிசன்
கடந்த 2000 ஆம் ஆண்டு இளம் புயலாக வறுமையின் பிடியில் பார்சிலோனா அணியில் இணைந்த மெஸ்ஸி, தனது 13வது வயது முதல் அந்த அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இன்று கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை தற்போதைய நம்பர் 1 வீரனாக கருதப்படுபவர் லயோனல் மெஸ்ஸி. தான். இவருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கும் இடையே தான் கம்பேரிசன் மோதல் நடக்கும். இந்த அளவுக்கு புகழ்பெற்ற மெஸ்ஸியை ஒரு காலத்தில் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளவே பலரும் தயங்கினார்கள்.
தினம் ஒரு ஊசி
அர்ஜென்டினாவில் ரோசாரியோ நகரில் பிறந்த லயோனல் மெஸ்ஸிக்கு, Hormone Deficiency எனும் வளர்ச்சிக் குறைபாடு நோய் இருந்தது. இதனால் அவர் உயரமாக வளர்வது தடைபட்டது. அவர் வளரவேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போடவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார். ஆனால் ஊசியை வாங்க மெஸ்ஸியின் தந்தையிடம் பணம் கிடையாது. அந்த இளம் வயதிலேயே கால்பந்து கிளப்பில் விளையாடும் அளவுக்கு திறமை இருந்தாலும், அவரை எந்த அணி சேர்க்கவில்லை.
டிஷ்யூ பேப்பர்
இந்த நிலையில் தான் பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். எனினும், தான் உதவ வேண்டுமென்றால் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இது தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது. இதில், வேடிக்கை என்னவெனில் அப்போது ஒப்பந்தம் போட்டுக்கொள்ள சரியான காகிதம் கிடைக்கவில்லை. இதனால் அப்போது கைக்கு கிடைத்த ஒரு பேப்பர் நாப்கினில் இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். உலகின் முன்னணி கால்பந்து வீரனாக உயர்ந்த நிலையிலும், அன்று தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பேப்பர் நாப்கினை இன்னும் பிரேம் போட்டு வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி.
மொத்தம் 45
ஆனால் இன்று அந்த அணிக்காக அவர் எத்தனையோ கோப்பைகளை வென்றுக் கொடுத்திருக்கிறார் தெரியுமா? 45.
லா லிகா - 10
கோபா டெல் ரே - 7
ஸ்பானிஷ் சூப்பர் கோப்பைகள் - 8
சாம்பியன்ஸ் லீக் - 4
ஐரோப்பிய சூப்பர் கோப்பைகள்- 3
கிளப் உலகக் கோப்பைகள் - 3
மொத்தம் - 45
கைப்பற்றிய விருதுகள்
தவிர அவர் வென்றுள்ள விருதுகள் எத்தனை தெரியுமா? 40.
கோல்டன் பால் - 2009, 2010, 2011, 2012, 2015, 2019
2009, 2011, 2015 - UEFA Men's Player of the Award
ஐரோப்பிய கோல்டன் ஷூ - 2010, 2012, 2013, 2017, 2018, 2019
பிச்சிச்சி டிராபி - 2010, 2012, 2013, 2017, 2018, 2019, 2020, 2021
2009, 2010, 2011, 2012, 2015, 2019 - சாம்பியன்ஸ் லீக் அதிக கோல் அடித்தவர்
சாம்பியன்ஸ் லீக் 2019 இல் சிறந்த ஸ்ட்ரைக்கர்
2009, 2010, 2011, 2012, 2013, 2015 ஆம் ஆண்டின் லா லிகா வீரர்
கிளப் உலகக் கோப்பை 2009, 2011 இல் சிறந்த வீரர்
கிளப் உலகக் கோப்பை கோல்டன் பூட் 2011
FIFA The Best - 2019
மொத்தம் - 40
சாதாரண பேப்பர் நாப்கினில் கையெழுத்துப்போட்டு, உலகையே திருப்பிப் போட்டு, வெற்றிகளை குவித்து, பதக்கங்களை குவித்து, விருதுகளை குவித்து பார்சிலோனா அணிக்காக தனது ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி இன்று அந்த அணியின் இருந்து வெளியேறி இருப்பது உண்மையில் அவரது வாழ்க்கையின் மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.