வெல்வாரா மெஸ்ஸி?
இப்போது தான் வெல்லாத ஒரேயொரு பட்டத்திற்காக கடைசி முறையாக களம் புக போகிறார். ஆம், எத்தனை கோப்பையை வென்றாலும், அது உலகக்கோப்பைக்கு ஈடாகாது. அதற்காக தான் 35 வயதிலும் களத்தில் மெஸ்ஸி மேஜிக் செய்துகொண்டே இருக்கிறார். நாளை நடக்கவுள்ள போட்டியின் முடிவு தான், மெஸ்ஸி குறித்த பல்வேறு விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது.
சிறந்த வீரர்கள்
பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கையிலேந்தும் தருணம் தான், அவரை கால்பந்து வரலாற்றின் தவிர்க்க முடியாத வீரான மாற்றப் போகிறது. இதுவரை கால்பந்தில் மெஸ்ஸி செய்த சாதனைகளுக்காகவே பீலே, மாரடோனா, ஸ்டிஃபானோ, ஜோகன் கரஃப் ஆகியோரோடு ஒப்பிடப்பட்டு வருகிறார். ஆனால் உலகக்கோப்பை வெல்வதன் மூலம், இவர்களை விடவும் உயர்வான இடத்தை மெஸ்ஸி அடைவார் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.
மாரடோனாவே பெஸ்ட்
இதுகுறித்து அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ஸ்காலோனி கூறுகையில், கால்பந்து வரலாற்றில் லயோனல் மெஸ்ஸி தான் மிகச்சிறந்த வீரர். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் ஷெரார் மெஸ்ஸி பற்றி கூறுகையில், என்னை பொறுத்தவரை மாரடோனா தான் மெஸ்ஸியை விடவும் சிறந்த வீரர். ஏனென்றால் மெக்சிகோவில் வென்ற 1986 உலகக்கோப்பை மட்டுமே காரணம். ஒருவேளை, மெஸ்ஸி உலகக்கோப்பை வென்றால், என் கருத்தில் மாற்றம் வரும் என்று தெரிவித்துள்ளார்.
மாரடோனா vs மெஸ்ஸி
இதேபோல் அர்ஜென்டினா முன்னாள் வீரர் புர்சாகா கூறுகையில், உலகக்கோப்பையை வெல்கிறாரோ இல்லையோ, மாரடோனாவுக்கு கொஞ்சம் கூட குறைந்தவர் இல்லை மெஸ்ஸி. கடந்த 70 ஆண்டுகளில் சிறந்த கால்பந்து வீரர்கள் என்றால் ஸ்டிஃபானோ, ஜோகன் க்ராஃப், பீலே, மாரடோனா மற்றும் மெஸ்ஸி தான்.
தொடர்ந்த சோகம்
2014ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி, 2015ம் ஆண்டு கோபா அமெரிக்கா இறுதிப்போட்டி தோல்வி, 2016ம் ஆண்டு கோபா அமெரிக்கா இறுதிப்போட்டி தோல்வி, இதன் பின்னர் அறிவிக்கப்பட்ட ஓய்வு, ஓய்வை திரும்பப் பெற்றது, 2018 உலகக்கோப்பை தோல்வி என அர்ஜென்டினா அணிக்காக ஆடிய மெஸ்ஸியின் கடந்த காலம் சாதாரணமானது அல்ல.
புதிய மெஸ்ஸி
பின்னர் 2018ம் ஆண்டு அர்ஜென்டினா பயிற்சியாளராக ஸ்கலோனி வந்த வெற்றிக்கு மெஸ்ஸியிடம் வந்த புத்துணர்ச்சியும், மாற்றமும் யாரும் பார்க்காதது. இதனால் நாளை நடக்கவுள்ள உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று வரலாற்றில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.