கால்பந்தாட்டத்தில் 22 ஆண்டுகள்
கால்பந்தாட்டத்தில் 22 ஆண்டுகள் கோலோச்சிய கால்பந்தாட்டத்தின் கிங்காக பார்க்கப்படுபவர் பீலே. தனது கேரியரில் இவர் 1,282 கோல்களை அடித்துள்ளார். சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய பீலே, பிரேசில் நாட்டிற்காக 3 முறை உலக கோப்பையை வென்று தந்தவர். மேலும் 92 முறை ஹாட்ரிக் கோல்களை போட்டு பெருமை பெற்றவர். உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக போற்றப்படும் இவர் கருப்பு முத்து என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
1978ல் ஓய்வு பெற்ற பீலே
இவருக்கு கடந்த 1978ம் ஆண்டில் அனைத்துலக அமைதி பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் இவர் கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். கால்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப்படுத்திய பீலேவின் ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் 25 நாடுகளை சேர்ந்த 761 பத்திரிகையாளர்கள் மற்றும் சில நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
மன அழுத்தத்திற்கு உள்ளான பீலே
கால்பந்தாட்டத்தின் கிங்காக 22 ஆண்டுகள் கோலோச்சிய பீலேவின் உடலில் பல்வேறு நோய் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இடுப்பில் செய்யப்பட்டுள்ள ஒரு அறுவை சிகிச்சை காரணமாக அவரால் சாதாரணமாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஒருவித மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவரது மகன் எடின்ஹோ தெரிவித்துள்ளார்.
மற்றவர்களை சந்திக்க வெட்கம்
தன்னுடைய உடல்நிலை காரணமாக அடிக்கடி மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டுவரும் பீலே, சாதாரணமாக நடக்க முடியாமல் வீல்சேரின் உதவியுடன் செயல்பட்டு வருகிறார். இதனால் வெளியில் செல்லாமல், யாரையும் சந்திக்க விரும்பாமல் அவர் உள்ளார். இதனால் அவரது மனஅழுத்தம் அதிகமாகி வருவதாகவும் எடின்ஹோ கூறியுள்ளார்.
இடுப்பில் அறுவை சிகிச்சை
ஒரு போட்டியின்போது தன்னுடைய விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக பீலேவிற்கு ஒரு கிட்னி அகற்றப்பட்டது. ஒரு கிட்னியுடன் செயல்பட்டுவரும் பீலே, அது தொடர்பான பல்வேறு உபாதைகளை சந்தித்து வருகிறார். கால்பந்தாட்டத்தின் கிங்காக செயல்பட்டு வந்த இவருக்கு வயது மூப்பு காரணமாகவும் தற்போது உடல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளதாக எடின்ஹோ வருத்தம் தெரிவித்துள்ளார்.