சாம்பியன் பட்டம்
கடந்த 2018ஆம் அண்டு ஓடிசா மாநிலம் கட்டாக்கில் தேசிய அளவிலான மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 18 முறை சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பூர் அணியுடன், தமிழக வீராங்கனைகள் மோதினர். இதில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
3 ஆண்டுகள்
சாதனை படைத்த மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்பிய தமிழக மகளிர் அணிக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மகளிர் அணியின் இந்த வெற்றியை யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. சரி, தமிழக அரசு ஏதாவது உதவி செய்யும் என்று பார்த்தால், அங்கும் ஏமாற்றமே கிடைத்தது. இதனால் தங்களுக்கு பரிசுத் தொகை வழங்க வேண்டி, தமிழக வீராங்கனைகள் அரசின் கதவை தட்டினர். கஷ்டப்பட்டு அடைந்த வெறறிக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போன வலியை தமிழக வீராங்கனைகள் அனுபவித்தனர்
சமூக வலைத்தளம்
இதனிடையே, தமிழக மகளிர் கால்பந்து அணிக்காக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் களமிறங்கினர். பிகில் படத்தில் கதையில் வருவது போல் உண்மையான தமிழக அணி சாதனை படைத்ததாகவும், அவர்களுக்கு 3 ஆண்டுகளாக தமிழக அரசு உதவி செய்யவில்லை என்றும் சமூக வலைத்தளத்தில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு கோரிககை வைத்தனர்.
பரிசுத் தொகை
இதனை அறிந்த அமைச்சர் மெய்யநாதன், சாதனை படைத்த தமிழக வீராங்கனைகள் குறித்து கேட்டறிந்தார். இதன் பின்னர், 2018ஆம் ஆண்டில் சாதனை படைத்த தமிழ்நாடு மகளிர் அணிக்கு 25 லட்சம் பரிசுத் தொகையை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் வீராங்கனைகளுக்கு தமிழக அரசின் குரூப் சி பிரில் மாதம் 50 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் வகையில் வேலை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான பிகில் அணிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.