கண்ணீர் சிந்திய நெய்மர்
காயத்தால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெய்மார் தெரெசோ போலிஸ் நகரில் நேற்று முதல்முறையாக நிருபர்களை சந்தித்தார். பிரேசில் அணியின் தோல்வி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு உணர்ச்சிவசப்பட்டு அவர் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
இயல்பான சம்பவம் கிடையாது
இதன்பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு அவர் பேசியதாவது: எனது முதுகெலும்பு காயத்துக்கு காரணமான ஜூனிகா சில தினங்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தார். அத்துடன் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும் கூறினார். அவரது மன்னிப்பை நான் ஏற்றுக்கொண்டபோதிலும், கால்பந்தாட்டத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அந்த சம்பவம் இயல்பாக நடந்தது இல்லை என்பது நன்றாக தெரியும். முதுகுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை வீரர்கள் பார்க்க முடியாது.
கடவுளுக்கு நன்றி
எனது காயம் இன்னும் 2 செ.மீ அதிகமாக பட்டிருந்தாலும் நான் வீல் சேரில் தான் வர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். லேசான காயத்துடன் தப்புவித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அரை இறுதியில் பிரேசில் கண்ட தோல்வியை என்னால் நம்பமுடியவில்லை. என்ன நடந்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. அதேநேரம் அணியில் ஒவ்வொரு வீரரும் செயல்படும் விதம் எனக்கு பெருமை அளிக்கிறது.
அர்ஜென்டினா வெல்ல வேண்டும்
நான் அர்ஜென்டினாவும், பிரேசிலும் இறுதிப்போட்டிக்கு வர வேண்டும் என்று விரும்பி வந்தேன். ஆனால் நினைத்தபடி எங்களுக்கு நடக்கவில்லை. இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். இருப்பினும் அர்ஜென்டினா அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
மெஸ்சி எனது நண்பர்
அந்த அணியில் இடம் பிடித்துள்ள லியோனல் மெஸ்சியும், மாஸ்செரனோவும் என்னுடன் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருபவர்கள். இதில் மெஸ்சி எனது நெருங்கிய நண்பர். அவர் கால்பந்து உலகில் ஏறக்குறைய எல்லாவற்றையும் வென்று விட்டார். எனவே அவர் உலக சாம்பியனாக இருப்பதற்கு தகுதியானவர் என்று நினைக்கிறேன். மெஸ்சி அணி, கோப்பையை வெல்ல நான் உற்சாகப்படுத்துவேன். இவ்வாறு நெய்மர் கூறினார். கால்பந்தாட்டத்தில், அர்ஜென்டினாவும்-பிரேசிலும், கிரிக்கெட்டில், இந்தியாவும்-பாகிஸ்தானையும் போல எப்போதும் எதிரிகள். இருப்பினும் இவை இரண்டும் தென் அமெரிக்க நாடுகள் என்பதாலும், பிரேசிலை ஜெர்மனி மோசமாக தோற்கடித்ததாலும் நெய்மர் தனது ஆதரவை அர்ஜென்டினாவுக்கு அளித்துள்ளார்.