வண்டி இழுக்கும் தொழிலாளியின் மகள்
இந்திய ஹாக்கி அணியில் தன்னுடைய 15வது வயதில் இணைந்தவர் ஹரியானாவின் ஷாபாத் பகுதியை சேர்ந்த ராணி ராம்பால். இவருடைய தந்தை வண்டி இழுக்கும் தொழிலாளி. மிகவும் இளம் வயதில் தேசிய ஹாக்கி அணியில் இடம்பெற்று புகழ் பெற்றவர் ராணி ராம்பால். சாதாரண கூலித் தொழிலாளியின் மகளாக இருந்து உயரங்களை தொட்டுள்ளவர்.
அழுகையை கட்டுப்படுத்த முடியாத ராணி
இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான கேல் ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராணி ராம்பால், தனக்கு விருது அறிவிக்கப்பட்டவுடன் தன்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். தான் கண்ணீர் விட்டு அழுவதை பார்த்து தன்னுடைய பெற்றோர் மிகவும் பயந்து விட்டதாகவும் அவர் கூறினார்.
தியாகங்களுக்கு கிடைத்த வெகுமதி
தன்னுடைய பெற்றோருக்கு இந்த விருது குறித்த எந்த புரிதலும் இல்லை என்றும் இதையடுத்து இந்த விருது குறித்து தன்னுடைய தந்தைக்கு தான் தெரியப்படுத்தியதாகவும், அதுகுறித்து அறிந்தவுடன் அவரும் உணர்ச்சி வசப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். தனக்கு இந்த விருது கொடுக்கப்படும் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்றும் தன்னுடைய கடினமான உழைப்பு மற்றும் தியாகங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த விருது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் கனவு
இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, மல்யுத்த வீரர் வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீரர் மணிகா பத்ரா, பாரா ஒலிம்பிக் வீரர் தங்கவேலு மாரியப்பன் மற்றும் ராணி ராம்பால் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அங்கீகாரத்துடன் அடுத்ததாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தன்னுடைய லட்சியம் என்று ராம்பால் மேலும் கூறியுள்ளார்.