
ஸ்பான்ஸரும் கிடைக்கல
ஆம்! உண்மையில், இந்தியாவுக்கு என்று தேசிய விளையாட்டு எதுவுமே கிடையாது. ஹாக்கியும் இந்தியாவின் தேசிய விளையாட்டு கிடையாது. இன்னும் சொல்லப்போனால், இந்திய ஹாக்கி அணி ஸ்பான்சர்ஸ் கிடைக்காமல் தடுமாறி வரும் அளவுக்கு நிலைமை மோசமானது. கடந்த 2018ம் ஆண்டு சஹாரா நிறுவனம் இந்திய ஹாக்கி அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. அப்போது திக்கற்று நின்ற ஹாக்கி அணியை, தாமே முன்வந்து 'இந்திய ஹாக்கி அணிக்கான மொத்த செலவுகளையும் இனி எனது ஒடிசா அரசு பார்த்துக் கொள்ளும்' என்று அறிவித்தவர் முதல்வர் நவீன் பட்நாயக்

370 கோடி ரூபாய்
அதுமட்டுமின்றி, ஒரு புதிய ஒப்பந்தம் ஒன்றையும் உருவாக்கி அதில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின்படி, ஹாக்கி விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், மைதானங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக 5 ஆண்டுகளுக்கு 120 கோடி ரூபாயை ஒதுக்கியது ஒடிசா அரசு. இந்த 120 கோடியைத் தவிர, விளையாட்டுத்துறைக்காக ஒவ்வொரு வருடமும் ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையிலிருந்து ஹாக்கி விளையாட்டுக்காகவும் ஒடிசா அரசு செலவு செய்து வருகிறது. ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், கல்வி உள்ளிட்டவற்றுக்கான செலவுகளுக்காக விளையாட்டு பட்ஜெட்டிலிருந்து ஒரு பகுதி பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டுத்துறைக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு 265 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 370 கோடி ரூபாயாக ஒடிசா அரசு உயர்த்தியது.

41 ஆண்டு கால கனவு
இந்த சூழலில் தான், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும், வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்தது. இதன் மூலம் ஒலிம்பிக்கில், இந்தியா 41 வருடங்கள் கழித்து பதக்கம் வென்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் இந்த வெற்றி அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. இந்திய ஹாக்கி வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாகும். இந்த வெற்றிகளுக்கும், ஹாக்கி அணியின் முன்னேற்றத்திற்கும் மிக முக்கிய நபராக பார்க்கப்படுபவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தான்.

பொது நல வழக்கு
இந்திய ஹாக்கி அணியின் நிலைமை இப்படியிருக்க, இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. விஷால் திவாரி என்ற வழக்கறிஞர், ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்த பொது நல வழக்குகளை (PIL) தள்ளுபடி செய்தது. நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த முடிவை எடுத்தது, மேலும் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் பெலா எம் திரிவேதி ஆகியோர் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.

கிரிக்கெட்டின் வெளிச்சம்
திவாரி தனது மனுவில், "நாட்டிற்கு ஒரு தேசிய விலங்கு இருக்க முடியும் என்றால், அந்த நாட்டிற்கு ஏன் அதன் தேசிய விளையாட்டு இருக்க முடியாது?" என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். தடகள விளையாட்டு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்காக அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும், வீரர்களுக்கு மேம்பட்ட பயிற்சி மற்றும் நிதி வழங்கவும் இந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவில் மேலும், "கிரிக்கெட்டில் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடாக உள்ளது. அதில், பல நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் உருவாக்குகிறது. ஆனால், மற்ற விளையாட்டுகளில் இந்தியா போராடுகிறது. கிரிக்கெட்டின் பிரம்மாண்ட வெளிச்சத்தில் ஹாக்கி விளையாட்டு ஆதரவு ஏதுமின்றி அதன் புகழை இழந்துள்ளது.

உத்தரவிட முடியாது
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "மக்களுக்குள் ஒரு உந்துதல் இருக்க வேண்டும். மேரி கோம் போன்ற வீரர்கள் எல்லா துன்பங்களையும் தாண்டி உயர்கிறார்கள். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது. எங்களால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் மனுவை வாபஸ் பெறலாம், அல்லது நாங்கள் அதை தள்ளுபடி செய்வோம்" என்றனர். இதனால், திவாரி இறுதியில் பொதுநல மனுவை திரும்பப் பெற்றார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த போதிலும், மனுதாரரிடம் தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தியது, ஆனால் இது தொடர்பாக தாங்கள் அரசாங்கத்திற்கு நேரடி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டனர்.


Click it and Unblock the Notifications











