ஆசி விளையாட்டுக்கு முன்னோட்டம்
உலக மற்றும் ஆசிய சாம்பியனான இந்திய அணி, தொடர்ந்து தனக்கு ஈடு கொடுத்து ஆடி வரும் ஈரான் அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்துமா? என்ற கேள்வியோடு இறுதி போட்டி தொடங்கியது. அடுத்து நடக்க இருக்கும் "ஏசியன் கேம்ஸ் 2018" க்கான முன்னோட்டமாக இந்த இறுதிப்போட்டி அமையும் என்ற எதிர்பார்ப்புகளோடு ஆட்டம் தொடங்கியது.
முதல் பாதி பரபரப்பு
ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணியின் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் இந்திய அணியின் கேப்டன் அஜய் தாக்கூர், ஐந்து ரெய்டு புள்ளிகளை பெற்றார். இதற்கிடையே, மின்விளக்குகள் அணைந்து இருளில் மூழ்கியது அரங்கம். இதனால், தேவையற்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. பத்து நிமிடங்களுக்கு பின், நிலைமை சீராகி ஆட்டம் தொடங்கியது. முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 18-11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டு அணிகளுக்கும், சரி சம வாய்ப்போடு ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியது.
2ம் பாதியில் இந்தியா முன்னிலை
இடையில், ஈரான் அணி சடசடவென புள்ளிகளை பெற்றாலும் முன்னிலை பெற முடியவில்லை. இடையே, இந்திய அணி காயமேற்படுதும் வகையில் ஆடுவதாக ஈரான் கேப்டன் நடுவரிடம் புகார் அளித்தார். அதை, நடுவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், இந்திய அணி தொடர்ந்து புள்ளிகளை குவித்து, ஈரானை விட இரு மடங்கு புள்ளிகளை பெற்று இருந்தது. ஈரானின், தோல்வி உறுதியான நிலையில், ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 44-26 என்ற நிலையில் வென்றது.
ஈரான் 2 முறை ஆல் அவுட்
இந்திய அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் 9 புள்ளிகளும், மோனு கோயத் 6 புள்ளிகளும் தங்கள் ரெய்டுகள் மூலம் பெற்றுத் தந்தனர். இந்தியாவின் தற்காப்பு வீரரான சுர்ஜீத் சிங் 7 புள்ளிகளை பெற்று தந்தார். இந்தியா, ஈரான் அணியை இரண்டு முறை "ஆல் அவுட்" செய்தது, வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.