சென்னை: இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற கபடி தொடர் இவ்வாண்டு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஏற்கனவே 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில் இப்போது மேலும் 4 அணிகள் இணைந்துள்ளன. இதனால் அணி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக இணைந்த அணிகளில் 'தமிழ் தலைவாஸ்' ஒன்று.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபர் பிரசாத் ஆகியோர் இந்த அணியை வாங்கியுள்ளனர். அணியின் தூதராக நடிகர் கமல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியின் பயிற்சியாளர் காசிநாதன் பாஸ்கரன். டெல்லியில் மே மாதம் நடைபெற்ற ஏலத்தில் முழு கோட்டாவான 25 வீரர்களையும் வாங்கியது இந்த அணி.
ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ், யுபி யோதா என்பவை மற்ற 3 அணிகளாகும்.
தமிழ் தலைவாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது முன்னோர்கள் உருவாக்கிய விளையாட்டை துலக்கமாக தெரிய செய்வதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமைதான். இந்த அணியின் உரிமையாளர்கள் என்னைத் தேர்வுசெய்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி" என கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.