தமிழ் தலைவாஸுக்கு தண்ணி காட்டிய பெங்களூரு புல்ஸ்
சென்னை: தமிழகத்தை நோக்கி இரண்டு புயல் வரப் போகிறது, நல்ல மழை பெய்யும் என்று கூறப்பட்ட சில மணி நேரத்திலேயே, அது அதிமுக அமைச்சர்கள் சொல்லியதை போன்று பொய்யான செய்தி என்று தெரிந்ததும் தமிழ் மக்கள் எப்படி புஸ் என்று ஆனார்களோ, அதுபோன்ற நிலையில்தான் தமிழ் தலைவாஸ் அணியும் உள்ளது.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகளில், சென்னை ஆட்டங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. நேற்று இரவு நடந்த கடைசி ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின.

காவிரியில் தண்ணீர் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரு புல்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணிக்கு தண்ணி காட்டியது. 45-35 என்ற கணக்கில் சுலபமாக வென்றது.
தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்று யார் சொன்னார்களோ, தமிழ் தலைவாஸ் அறிமுகமான முதல் சீசனில், முதல் படியிலேயே நின்று கொண்டிருக்கிறது.
நேற்று நடந்த ஆட்டத்திலும், கேப்டன் அஜய் தாக்குர் 15 புள்ளிகள் சேர்த்தார். ஆனாலும், வழக்கம் போல், கடைசி நேரத்தில் எப்படி சொதப்புவது என்பதில் பிஎச்டி முடித்தவர்களாகி விட்டனர், தமிழ் தலைவாஸ் அணி.
முதல் பாதியின்போது 19-10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்த பெங்களூரு புல்ஸ் அணிக்கு கேப்டன் ரோகித் குமார், 17 புள்ளிகளைச் சேர்த்து, தொடர்ந்து முன்னிலையில் இருப்பதை உறுதி செய்தார்.
உள்ளூரில் நடந்த போட்டிகளில் ஒன்று கூட வெற்றி பெறாத அணியாக தபாங்க் டெல்லி அணி இருந்தது. தற்போது தமிழ் தலைவாஸ் அணியும் அந்த சாதனைப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மொத்தம், 19 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ், 4 போட்டிகளில் வெற்றி, 13 தோல்வி, 2 டையுடன் 35 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பி பிரிவு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஜெய்ப்பூர் மற்றும் புனேயில் அடுத்தக்கட்ட ஆட்டங்கள் நடக்க உள்ளன.
ஜெய்ப்பூரில், 10ம் தேதி யு மும்பா அணியையும், புனேயில், 13ல் பெங்கால் வாரியஸ் அணியையும், 14ல் பட்னா பைரேஸ்ட் அணியுடனும் தமிழ் தலைவாஸ் மோத உள்ளது.
Story first published: Friday, October 6, 2017, 12:14 [IST]
Other articles published on Oct 6, 2017


Click it and Unblock the Notifications