ஓய்வு பெற்றார் இந்தியாவின் 'தங்க மகன்' அபினவ் பிந்த்ரா ! #Abhinav
டெல்லி: ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவின் தங்க மகனாக ஜொலித்த அபினவ் பிந்த்ரா, அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்தார்.
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா(33). இவர் உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் கடந்த 1982ம் ஆண்டு பிறந்தவர். தற்போது பஞ்சாபில் வசிக்கிறார். அபினவ்வின் தாத்தா இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர். தாத்தா ராணுவத்தில் இருந்ததால் அவரது வீட்டில் துப்பாக்கிகள் இருந்தன.

சிறுவயதிலேயே அவற்றின் மீது அபினவிற்கு ஓர் ஈர்ப்பு உண்டானது. துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அப்போதே உருவானது. பின்னர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சேர்ந்துள்ளார். அவர்களது குடும்பம் சண்டிகருக்கு இடம் பெயர்ந்தபோது அங்கே துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.
இதற்காக அபினவ் பிந்த்ராவிற்கு அவரது பெற்ரோர்கள் அவர்களது வீட்டிலேயே சிறிய துப்பாக்கி சுடும் உள் விளையாட்டு பயிற்சி அரங்கை அமைத்து கொடுத்துள்ளனர். கர்னல் தில்லான் என்பவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் மூலமாகத்தான் இந்தப் போட்டியின் அடிப்படைகளை அபினவ் கற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர் பீஜிங்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம், வென்றவர் அபினவ் பிந்த்ரா, தனி நபர் பிரிவில் இந்தியா ஒலிம்பிக்கில் பெற்ற முதல் தங்கம் அதுதான். இதன் மூலம் 108 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமை பிந்த்ராவுக்குக் கிடைத்தது.
அண்மையில் பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பைனலுக்கு முன்னேறிய அபினவ், 4வது இடம் பிடித்து நூலிழையில் வெண்கல வாய்ப்பை பறிகொடுத்தார். இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அபினவ், தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications