சென்னை : ஃபுட்சால் கால்பந்து பிரிமியர் லீக் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று ஏ.ஆர். ரகுமான் இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் லீக் போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை மும்பை வீழ்த்தியது. இந்த கால்பந்து போட்டியின் துவக்க நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி மந்திராபேடி தொகுத்து வழங்கினார்.
மூன்று மணி நேரம் வரை திறந்தவெளி மைதானத்தில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டை மொத்தமாய் சுருக்கி உள் விளையாட்டரங்கில் நம்மூர் டி20 கிரிக்கெட் போல, மொத்தம் நாற்பது நிமிடத்தில் விறுவிறுப்புடன் விளையாடித் தீர்ப்பது ஃபுட்சால். அதாவது ஃபுட்சால் போட்டியில் ஒரு அணியில் மொத்தம் 12 வீரர்கள் இருப்பார்கள். ஆனால் களத்தில் கோல் கீப்பர் உட்பட 5 வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள்.
எத்தனை மாற்று ஆட்டக்காரரை வேண்டுமானாலும் களம் இறக்கிக் கொள்ளலாம். ஆனால் களத்தில் 5 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.
உள்ளரங்க மைதானத்தில் மட்டுமே போட்டி நடைபெறும். கோல் கம்பம் மற்றும் பந்து வழக்கத்தை விட சிறிய அளவில் இருக்கும்.
முதல் பாதி 20 நிமிடம் அடுத்த பாதி 20 நிமிடம் என மொத்தம் 40 நிமிடங்கள். 15 நிமிடங்கள் இடைவேளை வழங்கப்படும். ஆப்சைடு கிடையாது, பேக் பாஸ் ஒரு முறைதான் செய்ய வேண்டும். சிவப்பு அட்டை வழங்கப்பட்டால் 2 நிமிடம் கழித்து மற்றொரு வீரரை களமிறக்கிக் கொள்ளலாம்.
கோல் கீப்பர் பந்தை 4 விநாடிகளுக்கு மேல் கையில் வைத்திருக்கக்கூடாது. அதே வேளையில் எதிரணி பகுதியில் சென்றும் இவர் விளையாடலாம். போட்டி டிரா ஆனால் கூடுதல் நேரம் அல்லது பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்படும்.
சென்னை, கோவா, மும்பை, கொச்சி, பெங்களூரு என ஒவ்வொரு அணிக்கும் ஐந்து வீரர்கள் கொண்ட ஆட்டம் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. ஏ.ஆர். இசையில் கோலாகலமாக தொடங்கிய இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். கவர்ச்சி தொகுப்பாளினி மந்திரா பேடி இந்த துவக்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த போட்டியில் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் சென்னை, மும்பை, கொச்சி அணிகளும், 'பி' பிரிவில் கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
முதல் போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை சந்தித்தது. ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்தில் மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி போக்லியா முதல் கோலை பதிவு செய்தார். 11வது நிமிடத்தில் ஏஞ்சல்லாட் 2வது கோலை அடித்தார். இதனால் மும்பை 2-0 என முன்னிலை பெற்றது. 25வது நிமிடத்தில் மும்பை மேலும் ஒரு கோல் அடித்தது.
33வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து மும்பை அணி 4-0 என வலுவான முன்னிலை பெற்றது. 34-வது மற்றும் 36-வது நிமிடத்தில் சென்னை அணி கோல்கள் அடித்தது. இதனால் மும்பை அணி 4-2 என வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4-2 என கோவா அணியை வீழ்த்தியது.