ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு
ஆனால், WWE தங்கள் வீரர்கள், ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை பல நாட்களாக வெளி உலகுக்கு கூறாமல் இருந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஊழியர்கள் பலர் சமூக வலைதளங்களில் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறி வருகின்றனர்.
அமெரிக்காவில் உச்சம்
அமெரிக்காவில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். நியூயார்க், கலிபோர்னியா மாகணங்களில் மட்டும் அதிக அளவில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு மற்ற மாகாணங்களுக்கும் பரவத் துவங்கி உள்ளது.
ப்ளோரிடா நிலை
WWE நிகழ்ச்சிகள் ப்ளோரிடா மாகாணத்தில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது, அந்த மாகாணத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 24 அன்று 5,500க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
புகார்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் அதிகரித்தது முதல் ரசிகர்கள் இல்லாத அரங்கில் தான் WWE போட்டிகள் நடந்து வருகிறது. ஆனால், அதே சமயம் WWE ஊழியர்கள், வீரர்கள் சமூக இடைவெளி இன்றி இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
பணி நீக்கம்
அது எதையும் WWE கண்டுகொள்ளவில்லை. போட்டிகளை நடத்துவதில் உறுதியாக இருந்தது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலை சமாளிக்க சிலரை வேலையில் இருந்து நீக்கியது. சில வீரர்கள் கொரோனா வைரஸ் அச்சத்தால் விலகியும் உள்ளனர்.
24 பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதலே WWE ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது வீரர்கள் உட்பட பணியில் இருப்பவர்களில் குறைந்தது 24 பேருக்கு பாதிப்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வெளியே சொல்லாமல்…
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்யும் இடத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தை விட்டு அனைவரையும் வெளியேற்ற வேண்டும். ஆனால், WWE பாதிப்பு ஏற்பட்டதையே வெளியே சொல்லாமல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இரண்டு முறை வந்த கொரோனா
WWE-இல் போட்டிகளுக்கு முன் மேடையில் அறிவிப்பை வெளியிடும் கைலா பிராக்ஸ்டன் என்பவர், தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி மிரள வைத்துள்ளார். மார்ச் மாதம் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமாகி வந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.
தொடர்ந்து நடத்துவோம்
இவரைப் போல பலரும் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாகி தனிமையில் இருப்பதாக கூறி உள்ளனர். இந்த நிலையில் WWE வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் முன்னர் தங்கள் வீரர்கள், ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து வருவதாக மட்டும் கூறி உள்ளது. என்ன நடந்தாலும் நிகழ்ச்சிகளை நடத்துவோம் என்பதையே இவ்வாறு கூறி உள்ளது WWE.