மீண்டும் வேலையை காட்டும் கொரோனா
உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவின் தாயகம் சீனாதான். ஆனாலும் கொடிய கொரோனாவை சீனா கட்டுப்படுத்தி இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அங்கு மீண்டும் கொரோனா வேலையை காட்ட தொடங்கியுள்ளது. இதனால் சீன அரசு பள்ளி, கல்வி நிறுவனங்களை மூடியது. பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
பீஜிங் ஒலிம்பிக் கிராமம்
மீண்டும் கொரோனா பரவுவது குளிர்கால ஒலிம்பிக் தொடரை பாதுகாப்பாக நடத்துவது சீனாவுக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால் பீஜிங் ஒலிம்பிக் கிராமத்தில் மிக, மிக கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு இல்லாமல் ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடிப்போம் என்று சீன அரசு உறுதி அளித்து இருந்தது.
2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
ஆனாலும் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி குளிர்கால ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா புகுந்து விட்டது. இரண்டு வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளதாக குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் அதிகாரி ஹுவாங் சுன் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் உறுதி
இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்துதலில் உள்ளனர் என்றும் ஹுவாங் சுன் கூறியுள்ளார். அங்கு மேலும் கொரோனா பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ஆனால் கொரோனாவை வெற்றி கொண்டு குளிர்கால ஒலிம்பிக்கை நடத்தி முடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.