கிராண்ட் மாஸ்டர்
செஸ் விளையாட்டில் ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்றால் 3 கட்ட கிராண்ட் மாஸ்டர் இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், போட்டிகளில் 2500 (Elo) புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டுமே சரியாக இருக்கும் பட்சத்தில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டம் வழங்கப்படும்.
இறுதி கட்டம்
அதன்படி பரத் சுப்ரமணியம் ஏற்கனவே 2 கட்டங்களை முடித்துவிட்ட நிலையில், தற்போது இத்தாலியில் நடந்த வெர்கானி கோப்பை போட்டியில் தனது 3வது கட்டத்தை பூர்த்தி செய்தார். மேலும் 2500 (Elo) புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 73வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
புள்ளி விவரம்
இந்த போட்டியில் பரத் சுப்ரமணியம் மொத்தம் உள்ள ஒன்பது சுற்றுகளில் இருந்து 6.5 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் அந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்தார். அவருடன் சேர்ந்து மேலும் 4 வீரர்களும் 7வது இடத்தை பகிர்ந்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாம்பவானின் பாராட்டு
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்த், பரத் சுப்ரமணியம் மிகவும் திறமைசாலியான சிறுவன். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது" என வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பும் பரத் சுப்ரமணியத்துக்கு தனது பாராட்டுகளை வழங்கியுள்ளது.
இதற்கு முன்?
இதற்கு முன்னர் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கொல்கத்தாவை சேர்ந்த மித்ராபா குஹா என்பவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருந்தார். செர்பியாவில் நடந்த போட்டியில் பட்டம் வென்ற நிலையில் 73வது நபராக பரத் தேர்வாகியுள்ளார்.