காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம்.. வெண்கலம் வென்றார் விகாஸ் தாகுர்
கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்தியா, 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. ஆடவர் பளுதூக்குதலில் விகாஸ் தாகுர் வெண்கலம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள் கடந்த புதன்கிழமை தொடங்கியது. ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள
இந்த போட்டியில் இந்தியா உள்பட 71 நாடுகளைச் சேர்ந்த 6,700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் நாளில், மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கம், ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் குருராஜா வெள்ளி வென்றனர். இரண்டாவது நாளில், மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில், சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவில், 18 வயதாகும் தீபக் லேதர் வெண்கலம் வென்றார்.
மூன்றாவது நாளான நேற்று ஆடவர் பளுதூக்குதல் 77 கிலோ எடைப் பிரிவில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ஆடவர் 85 கிலோ எடைப் பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த 20 வயதாகும் ரகலா வெங்கட் ராகுல் தங்கம் வென்று அசத்தினார். மூன்று நாட்களில் நான்கு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் பூனம் யாதவுக்கு தங்கம் கிடைத்தது. 10 மீட்டர் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹரியானாவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி மனு பாக்கர் தங்கமும், பஞ்சாப்பை சேர்ந்த ஹூனா சித்து வெள்ளியும், 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள்ஸ் பிரிவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரவிக்குமார் வெண்கலமும் வென்றுள்ளனர். அதையடுத்து, இந்த
காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 10 பதக்கங்கள் கிடைத்தன.
இந்த நிலையில் ஆடவர் 94 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில், இந்தியாவின் விகாஸ் தாகுர் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 153 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 351 கிலோ எடையைத் தூக்கினார்.


Click it and Unblock the Notifications