டெல்லி: சமீபத்தில் துனீஷியாவில் நடந்த உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இந்தியாவின் ஏக்தா பயான் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார். டாக்டராக வேண்டியவர், விபத்தில் சிக்கி முதுகுத் தண்டு பாதிக்கப்பட, அதில் இருந்து மீண்டு பாரா தடகள வீராங்கனையாகி நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
ஹரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த 31 வயதாகும் ஏக்தா பயான், உடல் ஊனமுற்றோருக்காக நடத்தப்படும் பாரா தடகளப் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளில் பல பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார். வட்டு எறிதல் மற்றும் கிளப் எனப்படும் மரக்கட்டையை எறிதல் பிரிவுகளில் அவர் சாதித்து வருகிறார். அதுவும் 2014ல் தான் அவர் பயிற்சி எடுக்கத் துவங்கினார்.
2016ல் பெர்லினில் நடந்த பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெள்ளி வென்றார். 2017ல் நடந்த பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார். முன்னதாக டில்லியில் நடந்த தகுதிச் சுற்றில் அசத்தினார். தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள ஏக்தா, துனீஷியாவில் கடந்த மாதம் நடந்த பார் தடகள கிராண்ட் பிரிக்ஸ் பிரிவில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்றார்.
12ம் வகுப்பு வரை மற்றவர்களைப் போலவே இவரும் சாதாரணமாகத்தான் இருந்தார். 12ம் வகுப்பு முடிந்த பிறகு, டாக்டராகும் கனவில், அதற்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான பயிற்சியில் சேர்ந்தார். 2003ல் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அளிக்கும் மையத்துக்கு ஏக்தா உள்பட 7 மாணவிகள் ஒரு வேனில் சென்றனர். அப்போது எதிரே வந்த ஒரு காய்கறி டிரக் நிலைத்தடுமாறி, இந்த வேனின் மீது சாய்ந்தது.
இந்த கோர விபத்தில், 5 மாணவிகள் அதே இடத்தில் இறந்தனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஏக்தா. முதுகுத் தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் மருத்துவமனையில் சிகிச்சை. அதன்பிறகு, முதுகுத் தண்டை வலுப்படுத்த பயிற்சி என சில ஆண்டுகள் போயின. வீல்சேரில் தான் வாழ்க்கை என்ற நிலையில், 2009ல் பிஏ படித்தார். பின்னர் அரசு தேர்வு எழுதி, அரசு வேலையில் சேர்ந்தார்.
My sister Ekta Bhyan has One Gold medal 🥇 and one Bronze medal at World Para Athletics Grand Prix at Tunisia, 2018 .
— Sanchit Malik (@maliksanchit) July 12, 2018
Hope some day media will cover her inspirational journey . #ParaAthletics pic.twitter.com/VoOHcGYg8K
இதனிடையில் முதுகுத் தண்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட, அதற்காக இரண்டு முறை அறுவை சிகிச்சை, பிசியோதெரபி என மருத்துவமனைக்கு நடையாய் நடந்தார். இந்த நேரத்தில்தான், அர்ஜூனா விருது பெற்ற அமித் சரோஹாவை சந்தித்தார். முதுகுத் தண்டை வலுப்படுத்துவதற்காக விளையாட்டில் இறங்கினார் ஏக்தா. தற்போது சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறார். உடல் ஊனமடைந்தபோதும், அதனால் சோர்ந்துவிடாமல், அதில் உள்ள வாய்ப்பை சாதகமாக்கி கொண்டுள்ளார் ஏக்தா.