டெல்லி: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தந்தார் டிரக் டிரைவரின் மகனான குருராஜா. பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று, தனது சொந்த சாதனை அவர் சமன் செய்தார்.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. போட்டிகளின் முதல் நாளி்ல் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் குருராஜா, 249 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயதாகும் விமானப் படை வீரரான குருராஜா, ஸ்னாட்ச் பிரிவில் 111 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 138 கிலோவும் தூக்கினார். இதன் மூலம் தனது சொந்த சாதனையை சமன் செய்ததுடன், இந்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டிரக் டிரைவரின் மகனான குருராஜா, மிகவும் ஏழ்மை நிலைமையில் இருந்து தனது தீவிர பயிற்சியின் மூலம் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார். இதன் மூலம், இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த மூன்று முறை காமன்வெல்த் சாம்பியனான முகமது இஷார் அகமது, 261 கிலோ எடையைத் தூக்கி, போட்டியின் சாதனையை முறியடித்ததுடன் தங்கம் வென்றார். இலங்கையின் லக்மல் சதுரங்கா, 248 கிலோ தூக்கி வெண்கலம் வென்றார்.