
நம்பிக்கையை தகர்க்கும் ஆயுதங்கள்
விளையாட்டு வீரர்கள் குறிப்பாக தடகள வீரர்களின் நம்பிக்கையை அவர்களது காயங்கள் தகர்த்து வருகின்றன. இதேபோல ஊக்கமருந்து சர்ச்சைகளில் இவர்கள் சிக்குவதும் அதிகமாக நடைபெறுகிறது. இதன்மூலம் இவர்களுக்கு தடை விதிக்கப்படுவதுடன் இவர்கள் பெற்ற கோப்பைகளும் பறிக்கப்படுவது இவர்களின் நம்பிக்கையை அதிகளவில் தகர்க்க செய்கிறது.

அறுவை சிகிச்சை செய்த நீரஜ் சோப்ரா
ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர். 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தேசிய சாதனையாளராக விளங்கும் சோப்ரா, பயிற்சியின்போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் இவரது பல்வேறு சாதனைகள் முடக்கப்பட்டுள்ளன. ஐஏஏஎப் உலக சாம்பியன்ஷிப் 2019ல் இவர் பங்கேற்கவில்லை.

காயத்தால் பாதிக்கப்பட்ட ஹிமா தாஸ்
இந்த ஆண்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டிகளில் ஒரே மாதத்தில் 5 தங்கம் வென்ற தங்க மங்கை ஹிமா தாஸ். இந்த ஆண்டின் முதல் பகுதியில் போட்டிகளில் பங்கேற்றாலும், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார். ஐஏஏஎப் உலக சாம்பியன்ஷிப் 2019 போட்டிகளில் பங்கேற்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடைசி நேரத்தில் அதில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

சோதனைகளுக்கிடையில் சாதனை
சர்வதேச தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை புரிந்துள்ள டூட்டி சந்த், பி.டி. உஷாவிற்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய பெண் என்ற சாதனையையும் கைவசம் வைத்துள்ளார். 2020ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலும் இவர் பங்கேற்கவுள்ளார். பல்வேறு சோதனைகளுக்கிடையில் இதை சாத்தியப்படுத்தியுள்ளார் இவர்.

சோதனையில் சிக்கிய கோமதி மாரிமுத்து
23வது சர்வதேச ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று இந்தியாவிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் கோமதி மாரிமுத்து. ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இவரது பதக்கம் பறிக்கப்பட்ட நிலையில், தான் பயன்படுத்தியதாக கூறப்படும் மருந்தின் பெயர்கூட தனக்கு தெரியாது என்று கூறியிருந்தார் கோமதி மாரிமுத்து. இத்தகைய ஊக்கமருந்து சோதனையில் சிக்குவது வீரர்களுக்கு மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

தடை பெற்ற தடகள வீராங்கனை
இதேபோல ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற தடகள வீராங்கனை சஞ்சீவனி ஜாதவ்வும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளார். சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து சோதனை
இதேபோல ஹரியானாவை சேர்ந்த தடகள வீராங்கனை மன்பிரீத் கவுரும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி 4 ஆண்டுகள் தடை பெற்றுள்ளார். கடந்த 2017ல் சீனாவில் நடைபெற்ற ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதலில் 18.86 மீட்டர் தூரத்திற்கு வீசி புதிய சாதனையை புரிந்து தங்கத்தையும் வென்றவர் இவர்.

முடக்கத்தை ஏற்படுத்தும் சோதனைகள்
பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், ஊக்கமருந்து சோதனைகள் மற்றும் காயங்கள் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவர்களின் சாதனைகள் நாட்டின் சாதனைகளாக கொள்ளப்பட வேண்டிய நிலையில், இவர்கள் இவ்வாறு முடங்குவதன் மூலம், இவர்கள் மட்டுமின்றி அடுத்த தலைமுறையினரும் அச்சம் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications











