நியூயார்க்: இத்தாலியின் பிளேவியா பென்னெட்டா, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தைத் தட்டிச் சென்றார். சக நாட்டு வீராங்கனை ராபெர்டா வின்சியுடன் நடந்த மோதலில் கடுமையாகப் போராடி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் வென்றார்.
முன்னதாக நடந்த அரை இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த செரீனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தார் வின்சி என்பது குறிப்பிடத்தக்கது.
7-6 (7-4). 6-2 என்ற செட் கணக்கில் இறுதிப் போட்டியில் வென்றார் பென்னெட்டா. இந்த வெற்றியுடன் டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
33 வயதாகும் பென்னெட், முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிகவும் வயதான வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் எப்படியாவது ஒரு கிராண்ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தனது கனவு நனவாகியிருப்பதாக பென்னெட்டா தெரிவித்தார்.
போட்டிக்குப் பின்னர் பென்னெட்டா பேசுகையில் இதுதான் நான் ஓய்வு பெறவும் சரியான தருணமாகும். நான் மிகவம் மகிழ்ச்சியாக இருக்கிறேன். டென்னிஸுக்கு குட்பை என்று கூறினார் அவர்.
இந்தப் போட்டியில் முதல் முறையாக இரு இத்தாலி வீராங்கனைகள் மோதியது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியிலும் இத்தாலி வீராங்கனைகள் மோதியதில்லை என்பதால் இதுவும் வரலாறு படைத்து விட்டது.
அதை விட இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இதில் பென்னெட்டாவுடன் மோதிய வின்சிக்கு வயது 32 ஆகிறது. எனவே அதிக வயதான இரு வீராங்கனைகள், ஒரு இறுதிப் போட்டியில் மோதியதும் இதுவே முதல் முறையாகும் என்பதுதான்.