இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது?
சென்னை : ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 800 மீட்டர் மகளிர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார் கோமதி மாரிமுத்து. ஆனால், இப்போது ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்.
இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்றாலும், அவர் கடும் சிக்கலில் இருப்பது மட்டும் உறுதியாகி உள்ளது. என்னதான் நடந்தது?

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்த போது கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அது முதல் மாதிரியின் சோதனை மட்டுமே.
தற்போது இரண்டாவது மாதிரியும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதன் முடிவுகளும், ஊக்கமருந்து பயன்படுத்தியதை உறுதி செய்தால், நான்கு ஆண்டுகள் தடைக்கு உள்ளாவார் கோமதி மாரிமுத்து.
மேலும், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் கோமதி வென்ற தங்கம் பறிக்கப்படும். முதல் மாதிரி முடிவுகள் கோமதிக்கு எதிராக இருப்பதால், அவர் தற்காலிகமாக தடகளப் போட்டிகளில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் குறித்த சர்ச்சை ஒருபுறமிருக்க, கடந்த மார்ச் மாதம் பாட்டியாலாவில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை தொடரிலும் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாக தற்போது கூறப்படுகிறது. இந்த தகவல் மிகவும் தாமதமாக வந்துள்ளதும் இந்த விவகாரத்தில் மர்மத்தை கூட்டுகிறது.
காரணம், மார்ச் மாதம் நடைபெற்ற விளையாட்டுத் தொடரில் ஒருவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தால், அவர் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு எப்படி அனுப்பப்பட்டார்? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, தகவல் தொடர்பில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இரு மாதங்களாகியும் இன்னும் பெடரேஷன் கோப்பையில் செய்யப்பட்ட கோமதியின் பரிசோதனை முடிவுகள், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிடம் இருந்து இந்திய தடகள சம்மேளனத்துக்கு வந்து சேரவில்லையாம்.
இதற்கிடையே கோமதியின் சகோதரர், அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. கோமதிக்கு எந்த தடை செய்யப்பட்ட பொருளையும் பயன்படுத்தவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications