ஹார்ட் அட்டாக்கால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் கால்பந்து வீரர் மரணம்
பிரஸ்ஸல்ஸ்: கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் நாட்டின் இளம் கால்பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெல்ஜியம் நாட்டின் 21 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணியில் இடம்பெற்றிருந்தவர் கிரிகோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்டிகளிலே விளையாடியிருந்தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கிளப் அணிக்காக சுமார் 100 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர் இவர்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ரிசர்வ் அணி போட்டியில் கிரிகோரி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மைதானத்திலேயே நிலைகுலைந்து மயங்கி விழுந்தார் கிரிகோரி.
மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் அளித்த முதலுதவிக்குப் பின், கிரிகோரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு கோமா நிலைக்கு சென்ற அவருக்கு உயிர்காக்கும் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறியதையடுத்து, செயற்கை சுவாசத்தை நிறுத்த உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால், நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு லோகிரன் கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு வீரர்களும் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications