தொடர் தங்க பதக்கங்கள்
தடகள வீராங்கனை ஹிமா தாஸ் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை இந்தியாவிற்காக பரிசளித்து வருபவர். திங் எக்ஸ்பிரஸ் என்று பாராட்டப்படும் இவர், கிளாடோ அத்லெட்டிக் மீட், குண்டோ அத்லெட்டிக் மீட் மற்றும் போஸ்னன் அத்லெட்டிக் கிராண்ட் பிக்ஸ் என 3 நிகழ்வுகளிலும் தங்கப்பதக்கம் பெற்றவர்.
அசாம் அரசு அறிவிப்பு
இந்நிலையில் அவரது சேவையை பாராட்டி அசாம் அரசு, ஹிமா தாசை மாநிலத்தின் டிஎஸ்பியாக நியமித்து உத்தரவிட்டுள்ளது. 21 வயதில் இவர் இந்த பெருமைக்கு உள்ளாகியுள்ளார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தகுதிச்சுற்றுக்காக பாட்டியாலாவின் நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
கிரண் ரிஜிஜூ உறுதி
இதனிடையே, ஹிமா தாசின் ஸ்போர்ட்ஸ் கேரியர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம்முடைய சிறப்புமிக்க தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டாலும் தொடர்ந்து விளையாடுவார்கள் என்றும் ஹிமா தாசும் தொடர்ந்து நாட்டிற்காக ஓடுவார் என்றும் கூறியுள்ளார்.
அசாம் அரசிற்கு பாராட்டு
விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் விளையாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அசாம் முதலமைச்சர் சர்பானந்த் சோன்வால் தலைமையிலான அமைச்சர்களின் ஹிமா தாசை மாநில டிஎஸ்பியாக அறிவித்த முடிவிற்கு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.