சென்னை: உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிசயம் மற்றும் ஆச்சரியம் அரங்கேறியுள்ளது. இது தற்செயலா.. அல்லது அப்படி இப்படியா என்பது தெரியவில்லை.
அதாவது அப்பா ரோஜர் பின்னியும், மகன் ஸ்டூவர்ட் பின்னியும் இந்த உலக்க கோப்பைப் போட்டியில் ஒருங்கிணைந்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி. கர்நாடகத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது தென் மண்டல தேர்வாளராக இருக்கிறார். இவரது மகன் தான் ஸ்டூவர்ட் பின்னி. இவர் ஒரு ஆல்ரவுண்டர். ஐபிஎல் போட்டிகளில் பிரமாதமாக ஆடியவர். இவர் தற்போது உலகக் கோப்பை் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
மகன் ஒருவரை அணியில் சேர்த்த அப்பா என்ற பெயரை இதன் மூலம் ரோஜர் பின்னி தட்டிச் சென்றுள்ளார். மேலும் கர்நாடகத்திலிருந்து இந்த முறை பந்து வீச்சாளர் என்று யாருமே இடம் பெறவில்லை. முன்பெல்லாம் ஸ்ரீநாத், பிரசாத், கும்ப்ளே, வினய் குமார் என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இப்போது பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கர்நாடகம் தேய் பிறையாகி விட்டது.
அதேசமயம் ராகுல் டிராவிட் இருந்த வரையில் நல்ல பேட்ஸ்மேன் ஒருவர் கர்நாடகத்திலிருந்து தொடர்ந்து இருந்து வந்தார். தற்போது அதுவும் இல்லாமல் போய் விட்டது.
இந்த நிலையில் இரண்டும் சேர்ந்த கவலையாக ஸ்டூவர்ட் பின்னி வந்துள்ளார். ஸ்டூவர்ட் பின்னிக்கு இதுவே முதல் உலகக் கோப்பைப் போட்டியாகும்.
பரவாயில்லை, கஷ்டப்பட்டு தேர்வு செய்த அப்பாவின் பெயரை ஸ்டூவர்ட் பின்னி காப்பாற்றி பின்னி எடுப்பார் என்று எதிர்பார்ப்போம்!